Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, 5 December 2009

அகம் காமாஸ்மி

எதிரே இரயிலிறங்கி வந்த சிலரை இடித்து தள்ளி….முட்டி மோதியபடி உயிரைக்கொடுத்து ஓடி….,எட்டி கை நீட்டி…,பிளாட்பாரம் முடிவதற்குள் கடைசிப்பெட்டியின் கடைசி படிக்கட்டில்.... கடைசி கைப்பிடியையாவது பற்றி விட்டால் போதும், தொற்றி தொங்கி…,பிறகு உள்ளே ஏறி விடலாம் என்று எடுத்த என் அத்தனை பிரயத்தனத்தையும் தோற்கடித்து பிளாட்பாரத்தின் கடைசி சரிவையும் கடந்து நிலையத்தைவிட்டு வெளியேறியது, அந்த இரவு நேரத்தின், அந்த கடைசி இரயில்.

எந்த ஸ்டேசன் ,எந்த இரயில், என்றிரவு என்பதெல்லாம் இந்த கதைக்கு அநாவசியம். அனுபவம் மட்டும்தான் பிரதானம் என்பதால்…குறுக்கே
யோசிக்காமல் படியுங்கள்.

நெஞ்சு எரிய, மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க…,அயர்ச்சியுடன் கால் முட்டிகளில் இரண்டு கைகளையும் ஊன்றி….குனிந்து …. ஆசுவாசப்படுத்திக்கொண்டு…இனி இரவு, இந்த பிளாட்பாரத்திலேயே படுத்துத்தூங்கிவிட்டு காலையில் முதல் வண்டிக்குதான் போகமுடியும் என்று யோசித்தபோது….அப்பாவின்மீது ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

இனி இந்த கடன்காரர்களிடம் வட்டிவசூலிக்கற வேலைக்கெல்லாம், அப்பாவே அனுப்ச்சாலும்….நான் வரக்கூடாது என்று கங்கனங்கட்டிக்கொண்டு நிலையத்தின் வெய்டிங் ஹால் நோக்கி நடந்தேன்.

இரவு பதினொரு மணி ஆகி விட்டிருந்ததால் ரயில்வே ஸ்டேஷனில் கேண்டீன் கூட அடைத்துவிட்டிருந்தார்கள். பசி வேறு உயிரை எடுத்தது.

பாழாப்போன அந்த கடன்காரப்பய பொண்டாட்டி காசு இல்லைன்னா இல்லைன்னு சொல்லி அனுப்பாம சாயந்தரம் ஆறுமணியிலிருந்து…..

‘….இதோ வந்திருவாரு…இருப்பா…! ..வந்தது வந்த..,பாத்து வாங்கிட்டுபோயிரு…அப்பறம் அப்பா …எங்கள கோவிச்சுக்குவாரு…! வர்ர நேரந்தான்…என்னமோ…இன்னைக்கு இவ்ளோ லேட்டு… சொல்லிகிட்டேதான் இருந்தாரு…! ஆனா இந்த தடவதான் இப்படி மூனு மாசம், மொத்தமா வட்டிபணம் நின்னுப்போச்சு…! அப்பாகிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லு….!அடுத்த மாசம் மொத்தமா அசல திருப்பிர்றோம்…….இதோ….அவரே…வந்துட்டாரு…. அட…அவரில்லையா… இருட்ல ஜாட அவரு மாதிரியே இருக்கவே ஏமாந்துட்டேன்.

ஆமா நீயும் ஃபர்ஸ்ட் இயர்தான படிக்கறே…? எங்கப்பொண்ணுகூட பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரி ஃபர்ஸ்ட் இயர்தான்.,…..அடியே…! உள்ள என்னடி பண்றெ….! ஹி…ஹி…அவ கொஞ்சம் கூச்ச சுபாவம். அப்படியே என்னமாதிரியே வந்து வாய்ச்சிருக்கா..!

அய்யோ…என்னவோ இன்னைக்குன்னு பாத்து இவருக்கு இவ்ளோ லேட் ஆகுதே…!...நீ வேண்னா கொஞ்சம் சாப்பட்றீயா..?...சங்கோஜப்படாத. இதுவும் உங்க வீடு மாதிரிதான்….பசிக்கிமேப்பா…சரி இரு வேன்னா இன்னொரு காஃபி போட்றேன்….ஏண்டீ….இவளே…தம்பிக்கு கொஞ்சம் காஃபியாவது கலந்துட்டுவாடீ..!…தட்ல…பிஸ்கட்டெல்லாம் அப்படியே வச்சது வச்சமாதிரியே இருக்கே…எடுத்துக்கப்பா…சாப்பிடு…! இந்த பாழாப்போன மனுஷன் இன்னும் என்னப்பண்ணுதோ..,உங்கப்பான்னா எங்களுக்கு ரொம்ப மரியாதை. பயமும்கூட. கோச்சுக்கபோறார்….கொஞ்சம் எடுத்து சொல்லுப்பா..! நேரமாயிட்டே இருக்கு…! ஆனா கடைசி வண்டி பதினொரு மனிக்குதான்…இதோ எட்டு வச்சா இரயில்வே ஸ்டேஷன்.!...நீதான் ,சாப்பிடமாட்டேன்னு அடம் புடிக்கறே…அதான் மனசுக்கு கஷ்டமாயிருக்கு…..!அடியேய்…என்னடீ…பண்றே…காஃபி கலந்தாச்சா இல்லையா..?..ஹ்.ஹி…ஹி…பிறத்தியார் முன்னாடி வர்றதுனா…ரொம்ப வெக்கப்படுவா…! இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணப்பெத்து வச்சுருக்கோம்!...., பரவால…சப்பியே குடிப்பா….! உங்ககிட்ட ஆச்சாரமெல்லாம் கிடையாது…எங்களுக்கு…! அடடே… இதோ அவரே வந்துட்டாரே……… ’ - ன்னு, அறுத்து தள்ள,

கடைசியில் அந்தாளு வந்து … - ‘மன்னிச்சுக்கோப்பா…அப்பாகிட்டே சொல்லு…அடுத்த மாசம் வட்டியும் மொதலுமா மொத்தமா செட்டில் பண்ணிர்ரேன்….’- அப்படின்னு சொல்லும்போது மணி பத்தே முக்காலாகிவிட்டிருந்தது. அடிச்சி புடிச்சு,…ரயில்வே ஸ்டேசன் வந்தப்போதுதான் அந்த கடைசி வண்டியும் காலை வாறிவிட்டது.

அந்த வெட்கம் மிகுந்த பி.எஸ்.ஸி ஃபஸ்ட் இயர் ஒரு முறையாவது எதிரே வந்துவிட மாட்டாளா….என்று இந்த வெட்கங்கெட்டவன் …..அந்த அம்மாவின் அறுவையையெல்லாம் தாங்கிக்கொண்டு …..சபலத்துடன் உட்கார்ந்திருந்ததின் பலன்…..இப்போது இந்த ஆளில்லாத இரயில்வே ஸ்டேசனில்…..- அனுபவித்தே தீர வேண்டும்.

வெயிட்டிங் ஹாலுக்கு வந்து பசியுடனே படுத்து எப்போது தூங்கிப்போனேன்னே தெரியல.
(இனிமேல்தான் கதை ஆரம்பிக்குது கவனமா படியுங்க.)
எவ்வளவு நேரம் போச்சுன்னு தெரியல. திடீர்னு எதோ அரவம் கேட்டு முழிப்பு தட்டுனப்போ வெயிட்டிங் ஹாலின் விளக்குகளெல்லாம் அனைக்கப்பட்டு, மெல்லிய இருட்டில் ‘சில்-அவுட்டில்’ ஏதோ ஒரு குடும்பம் மூட்டை முடிச்சுகளுடன் உள்ளே நுழைந்து இருட்டில் தட்டுத்தடுமாறி படுத்துக்கொள்ள இடம் தேடி நகர்ந்துக்கொண்டிருந்தது. அப்போது அனேகமாக மூன்றாம் ஜாமமாக இருக்கலாம்.
அவர்களும் வண்டி கிடைக்காமல் காலையில் முதல்வண்டிக்கு போகவேண்டியவர்களாக இருக்கலாம்.
வந்தவர்களில் அனேகமாக இரண்டு மூன்றுபேராவது பெண்களாய் இருப்பார்கள் என என் மூளை உத்தேசித்தபோதே பாலுணர்வுக்கான எனதுவசம் இருந்த அத்தனை சுரப்பிகளும் அந்த அர்த்த ஜாமத்தில் விழித்துக்கொண்டு கன்னாபினாவென வேலை செய்ய ஆரம்பிக்க....
நான், ... இப்படி நடந்தால் எப்படியிருக்கும்...! என்று கர்ப்பனை செய்துகொண்டிருக்கும்போதே....அது நடக்கவும் ஆரம்பித்தது.
அந்த கூட்டத்திலிருந்த, நான் எதிர்பார்த்த, அல்லது தேர்வு செய்த அந்த தாவணிப்பெண் கடைசியில் கையாலும், காலாலும் துழாவி துழாவி இருட்டில்..., என் முற்பிறவி கர்மவினைப்பயனாலும் என் பிதுருக்களின் பூர்வ புண்ய வினைபயன்களாலும்...என் சித்தம் சிறப்புற என் அருகிலேயே சயனம் கொள்ளும் சித்தமாய்,... எனதருகிலிருந்த அந்த ‘புன்னிய’ காலி இடத்தை அவள் தெரிவுசெய்யும்பொருட்டு விதியானது எனக்கு சகாயம் செய்தது.
எனது 20 வயதை கருத்தில் கொண்டு... கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க..
வெளியே பிளாட்பாரத்தில் ட்ராலி தள்ளும் சத்தம்.... இரண்டு, மூன்று பிளாட்பார்ம் தள்ளி ஏதோ ஒன்றில் வந்து நின்ற வண்டியில் ‘டீ..காபி’ –என கூவும் குரல்கள், இத்யாதி...இத்யாதி என.. ஒரு பின்னிரவுநேர இரயில்வே ஸ்டேஷன் இரைச்சல்களையெல்லாம் தாண்டி...எனது லப்-டப் ஓசை....ஸ்பஸ்டமாய் எனக்கே கேட்க... உடம்பெல்லாம்-(குறித்துக்கொள்ளுங்கள் ‘உடம்பெல்லாம்’) ஒரு விறைப்புத்தன்மைக்கு வந்து விட... அசையாமல் ஒரு மரக்கட்டையாய் கிடந்தேன். கொஞ்சநேரத்திற்குப்பிறகுதான் ஐம்புலன்களில் ஒவ்வொன்றாய் மெல்ல மெல்ல மீண்டும் விழித்துக்கொள்ள ஆரம்பித்தது.
முதல் உணர்வு நாசிக்குத்தான் எட்டியது. தலைநிறைய கதம்பமாய் ‘பூ’ வைத்திருப்பாள் போலிருக்கிறது. இது அதுவென யூகிக்க முடியாத அளவிற்கு ஏதோ ஒரு வாசனை. அது அவள் தலையிலிருந்த ‘பூ’வா..?பவுடரா..?-திரவியமா..?....அல்லது...வேர்வையுமா? மஞ்சள்...ஷாம்பூ...அரப்பு...சீயக்காய்...என அத்தனையும் சேர்ந்த கலவைகளோ....அல்லது...இவையெல்லாம் சேர்ந்து ஒரே தலைப்பில் ‘”’’’’’”பெண் வாசனை’ என்று சொல்லிவிடலாமா....?
நான் இப்படி சகல புலன்களாலும் பாதிக்கப்பட்டு திக்குமுக்காடிக் கொண்டிருக்க...அவளோ....இடம்தேடி படுத்துத் தூங்கியும் விட்டிருந்தாள்.
நேரம் ஓடிக்கொண்டிருந்ததுதான். ஆனால் என்னைப்பொறுத்தவரை பிரபஞ்ச இயக்கம் மொத்தமும் உறைந்து...எனது உயிர் இயக்கம் மட்டுமே எஞ்சியிருப்பதாய் பட்டது...
இப்போது அவள் புரண்டு படுக்கும்...அசைவு உணரமுடிந்தது...ஒருக்களித்து எனது பக்கமாய் திரும்பியிருப்பாள் போலிருக்கிறது. அருகில்...வெகுஅருகில்...இல்லை..என்மீது...ஏதோ...மயிலிறகு ஸ்பரிசம் போல்...தொட்டுக்கொண்டு...அல்லது....இல்லையோ...தெரியவில்லை. ஆனால் நான் ஒரு மைக்ரோ...மில்லிமீட்டர் அளவில் அசைந்தாலும் அவள் முகம்...மூக்கு..இதழ்கள்..பட்டுவிட வாய்ப்பிருக்கிறது...எனது காதோரத்தில் அவளது மூச்சுக்காற்று...உணரமுடிகிறது...இளம் வெதுவெதுப்பில்..சீரான இடைவெளியில்...ஒரு பெண்ணை அனுபவித்துவிடுவது என்றால் என்ன என்பதுபற்றியெல்லாம் எனக்கு அந்த வயதில் எதுவும் தெரியாது. ஆனால் அந்த வினாடிகளில் அவளை அனுபவித்துவிட்டேன் என்றுதான் தோனியது.
எனது டெஸ்ட்ரோஜன் சுரப்பிகளில் சூடு கிளம்பி - அதை விளக்கும் மொழிதிறனெல்லாம் இப்போதும் எனக்கு கைகூடவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
எனது காதுமடல்கள் சூடேறியிருந்தது. இந்த பிரபஞ்ச சூட்சுமத்தின் ஆதி ஒலி ‘ஓங்’காரம் என்றெல்லாம் சொல்வார்களே அப்படி எனக்கு அந்த கணம்...பிரபஞ்ச உறைதலுக்கிடையே திருவிளையாடலில் சிவபெருமான் பாடுவதை நிறுத்தி இயக்கமில்லாமல் இருக்கும்பொழுது....பிரபஞ்சம் முழுதும் அசைவற்று இருக்குமே அதுபோல்..அனைத்தும் ஒடுங்கி...என் இதயத்தின் லப்-டப் மட்டும்...'ஓ' ங்காரமாய்......
எவ்வளவு நேரம் அப்படியே இருப்பது...! திடீரென மீண்டும் ஒரு புரளலில் அவளது கால்களை தூக்கி என்மீது... (என் மீது என்றால் என் தொடைகள் மீது). கைகள் என் மார்மீது...என்று அமைய, நான் கிட்டத்தட்ட மூர்ச்சையாகும் நிலை. எனது தொடைகளிரண்டும் என் கட்டுப்பாட்டை மீறி.....தடதடவென லேசாக உதறுவதை உணரமுடிந்தது.
எனது தோள்களில் ஏதோ மென்மையாய் பஞ்சுப்பொதியாய்...அது அநேகமாய் அவளது தணங்களாயிருக்குமோ....?.மெல்ல ஒரு அசைவில் அதன்மீது ஒரு அழுத்தம் கொடுத்து உறுதிப்படுத்திக்கொள்ள தோணியதே ஒழிய தைரியம் வரவில்லை. சொல்லப்போனால் உடல் முழுக்க மறத்துப்போய் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை.
சரியான நாகரிக வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால்....இந்த உணர்வுக்கொந்தளிப்பில் மொத்த ‘நானும்’ என்னிலிருந்து வெளியேறிவிடுவேனோ...என்கிற உச்ச...நிலை...!.(புரியும் என்று நம்புகிறேன்)
ஒரு சில நிமிடங்கள்தான்...என்ன அசௌகரியத்தை உணர்ந்தாளோ...சட்டென எண்ணிலிருந்து... புரண்டு..... விலகிக்கொண்டாள்...இருட்டில்.. ‘சட்’டென..... ‘பிளக்’ பிடுங்கினதுபோல்...ஒரு வெறுமை...
ஆனால் என்னால் இதை தாங்கிக்கொள்ளமுடியவில்லை.
அவளது அருகாமையின்போது இருந்த படபடப்பு குறைந்து ஆசுவாசப்படுவதற்குப்பதில் இதயம் இப்போது முன்னைவிட அதிக அங்கலாய்ப்புடன் அதற்காக ஏங்க ஆரம்பித்தது. தறிகெட்டுப்போய் தத்தளிக்க ஆரம்பித்தது.
ஏதாவதான ஒரு அற்புதம் நிகழ்ந்து மீண்டும் அந்த பொற்கணங்கள் வாய்த்துவிடாதா..என்று காத்திருந்த மனது, ஒரு நிலையில் சலிப்புற்று, இனி காத்திருப்பதில் பயனில்லை என்று துணிந்து, மெல்ல கைகளை பக்கவாட்டில் நகர்த்தி துளாவி பார்த்ததில் அவள் எட்டாக்கனி ஆகிவிட்டிருந்தது புரிந்தது. ஏக்கம் இப்போது ஏமாற்றமாகி,..கொஞ்ச நேரத்தில் எரிச்சலாக மாற ஆரம்பித்தது. ஏதாவது செய்தாவது மீண்டும் அந்த அனுபவத்தை அடையவேண்டி மணம் அலைபாய..., தூக்கத்திலான ஏதோ அசவுக்கரியம்போன்ற பாவனையில் ஒரு படிநிலை புரண்டுப்படுப்பதான தோரனையில் நகர்ந்து மீண்டும் கைகளால் துளாவிப்பார்த்ததில் அவள் இடுப்பில் போய் என் கைகள் விழ, ஆஹா...என மனம் குதூகலம் அடையுமுன்பே சட்டென தன் கைகளால் இடுப்பில் விழுந்த எனது கைகளை சட்டென தட்டிவிட்டவள் இன்னும் கொஞ்சம் தள்ளி படுத்துக்கொள்ள, மனம் துணுக்குற்றது.
இதற்குமேல் அடுத்தகட்டத்திற்கு நகர அச்சமுற்று...தயக்கத்துடன் மீண்டும் பழைய நிலைக்கே நகர்ந்து படுத்துக்கொள்ள நேர்ந்தது.
இருந்தாலும் அந்த சுகானுபவத்திலிருந்து மீள மனமின்றி ...சில நிமிடங்கள் பின்னோக்கி பயணித்து அவள் புரண்டு படுத்து தன் கைகளையும் கால்களையும் என் மீது போட்டிருந்த அந்த நிமிடங்களை தேர்வு செய்து அதிலேயே கொஞ்ச நேரம் திளைத்திருந்தேன்
காரண காரியமில்லாமல் நான் முதன்முதலில், எட்டாங்கிளாஸ் படிக்கும்போது காதலித்த என் முதல் காதலியின் முகமெல்லாம் நினைவில் வந்து போனது. அவளை,...அல்லது சற்று நேரத்திற்கு முன் அந்த மாமி வீட்டில் பார்த்த...(இல்லை...கடைசிவரை பார்க்காத) பெண்ணை, அல்லது என்றோ ஒருநாள் நான் கட்டிக்கொள்ளப்போகும் முகம் தெரியத யாரோ.....ஒரு பெண்ணை....இதில் யாரை...வரிந்துகொள்வது என்றெல்லாம் குழம்பிப்போய்...பக்கத்தில் படுத்திருப்பவளை இவர்களில் ஒருத்தியாய் வரிசைகிரமமாய் கற்பனை செய்து......

கடைசியில் எப்போது தூங்கிப்போனேனோ தெரியவில்லை.

(இதற்குமேல் மன தைரியமிக்கவர்கள் தொடர்ந்து படிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை)
எவ்வளவு நேரம் தூங்கிவிட்டிருந்தேன் என்று தெரியவில்லை.
திடீரென ஏதோ அரவம் கேட்டு திடுக்கிட்டு முழிப்பு தட்டிக்கொள்ள....விழித்துக்கொண்டு சுற்றும் முற்றும் பரபரப்புடன் கவனிக்க பொழுது புலர்ந்து போயிருந்தது.
விழித்துக்கொண்டு சூழல் உணர்ந்த மறுவினாடி பக்கத்தில் படுத்திருந்தவளின் நினைவு முதலில் வர...திரும்பி, பக்கத்தில் பார்க்கிறேன். அவளுடன் நேற்றிரவு வந்தவர்கள் அதற்குள் எழுந்து கிளம்ப தயாராகிக்கொண்டிருக்க....
அதில் ஒருவர்,....தலை நிறைய பூச்சரங்களுடன் எனக்கு முதுகு காட்டி தூங்கிக்கொண்டிருக்கும் என் உள்ளங்கவர் 'கள்ளி'-யிடம் நெருங்கி காலால் எத்தி ‘யேய்...நாயே...! எழுந்திரி‘டா’...டேய்...ராகவா...அடச்சீ...எழுந்திரி...ட்ரெயினுக்கு..டைம்...ஆச்சுடா...’- என்றவாறு தொடர்ந்து என்னவளின் பிட்டத்தில் உதைத்தபடி திட்டிக்கொண்டிருக்க,
முனகிக்கொண்டே சலிப்புடன் எழுந்து உட்கார்ந்தவ( ), கரகரப்பான ஆண் குரலில் ‘என்னடா...வண்டி வந்துருச்சா..?’-என்ரபடி கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்க,
‘அடச்சீ...எழுந்து மொதல்ல ட்ரஸ்ஸ கழட்டிட்டு வேட்டிய கட்டுடா...! கூத்து முடிஞ்ச கையோட நாங்கல்லாம் கொட்டாயிலயே மேக்கப்ப கலச்சுட்டு கெளம்பி வரல..?’ என்றபடி எட்டி காலால் மீண்டும் ஒரு உதை விட.., என்னவ( ), வெட்கத்துடன் எழுந்து பாத்ரூம் நோக்கி ஓட...., நான்.........................

(அகம் காமாஸ்மி )

இந்த அனுபவத்திலிருந்து....மன்னிக்கவும், இந்த கதையிலிருந்து நீங்கள் அறிய வருகிற நீதி எனப்படுவது யாதென்று ஒரு பின்னூட்டம் இடுக.

Thursday, 17 September 2009



பொம்மலாட்ட பொம்மைகள் அல்லது எழவு



“பூ....ஊ....ம்.....” என்று நீளமாய் உயிரெடுத்து - அடி வயிற்றை பிசைகிறதாய் அலறுகிறது சங்கு.

“த்ரும்...த்ரும்…”என்று பறை அதிர, ஒலி இழைகள் அலை அலையாய் பிறந்து,...நீண்டு….எதையோ தேடி…தேடி…, ஊர் எல்லையில் போய் எதிரொலித்துக்கொண்டிருந்தது

பார்க்காமல், கேட்காமல், சுவாசிக்காமல், பார்வையாலன்றி... உணர்தலால் அனைத்தையும் அறியும் நிலை. அந்த கோணங்கள் அற்ற பார்வையுணர்வு திகைப்பான அனுபவமாயிருந்தது லட்சுமி கிழவிக்கு.

தன்னைச் சுற்றி கூடியிருந்தவர்களில் அடிக்கடி யாராவது ஒருவர் தன்னையோ தன் ஆடையையோ திருத்திக்கொண்டிருந்தது கிழவிக்கு சங்கடத்தை தந்து கொண்டிருந்தது. ஒப்பாரிக்கு இடையிடையே மூக்கை பாவனையாய் சிந்தி, சிந்தி, பக்கத்து புடவைகளில் துடைத்துக்கொண்டிருந்தனர் பெண்கள். நேற்று வேலிமுள்ளுக்காய் தன்னிடம் அசிங்கமான வார்தைகளுடன் சண்டை போட்ட பக்கத்து வீட்டு அருக்காணி கிழவிகூட , மூக்கை சிந்தியபடி தேம்பிக்கொண்டிருந்தது ஆச்சரியமாயிருந்தது.

கிழவியின் ஒரே மகள் பூங்கோதை, இன்னும் கால்மாட்டிலேயே மூக்கை சிந்தியபடி கிடந்தாள். காலையிலிருந்தே அப்படி இப்படி நகராமல்,ஒவ்வொரு முறையும் புதுசாய் யாரும் வரும்போதெல்லாம் அவர்களை கட்டிக்கொண்டு, ஓ...வென குரலெடுத்துஅழுதுக் கொண்டிருந்தாள். மருமகன் மாரிமுத்து தலைமாட்டுப் பக்கம் நின்றபடி தன்னையே வெறித்துக்கொண்டிருந்தது கிழவிக்கு கூச்சமாயிருந்தது. இதுநாள்வரை மருமகனுக்கு எதிரேகூட வராமல் இழுத்து இழுத்து போர்த்துக்கொண்டு வளைய வந்தவளுக்கு இப்போது அவனது அருகாமை சற்று சங்கடமாய்த்தானிருந்தது. மூக்கிலும் வாயிலுமாய் அவ்வப்போது ஒழுகிக்கொண்டிருந்த திரவத்தை துடைக்க , மருமகன் குனிந்த ஒவ்வொருமுறையும் சட்டென விலகிக்கொள்ள முயன்றபோது..... முடியவில்லை. இனிமேல் செயல்ரீதியாய் எதுவும் தன் வசமில்லை என்பது புரிந்துவிட்டது கிழவிக்கு. மருமகனின் அருகாமைகூச்சத்தில்-வெற்றுமார்பில் விலகிக்கிடந்த மாராப்பை யாராவது சரிசெய்து விடமாட்டர்களா...? என்று மனசு குறுகுறுத்தது. அனிச்சையாய் தானே முயன்றபோது, எழ இயலாமல் கட்டையாய் கிடந்தன கைகள். .

எப்பொழுது நாம் இறந்துபோயிருக்கக் கூடும் என்று யோசித்துப் பார்த்தாள் கிழவி. நேற்றா....? இல்லையே….! ராத்திரி மக கொடுத்த சுடு கஞ்சியை குடிச்சுட்டு திண்ணையில சாஞ்சது ஞாபகமிருக்கு. இடையில....சாமத்துல ஒருக்கா, எழுந்து திண்னையோரமா மூத்திரம் போனதுகூட ஞாபகமிருக்கு,...அப்போ....எப்பதான் செத்துபோனம்னுதான் சரியா தெரியல. திடீர்னு....யாரோ....’ஓ’... ன்னு போட்ட கூச்சல் உணர்ந்து தெளிஞ்சப்போ, கூடத்தில் போட்டு, மகள் ஒப்பாரிவைத்துக் கொண்டிருக்க, கூட்டம் கூடிப்போயிருந்தது. பதறிப்போய் ’சட்’டென எழுந்து உட்கார்ந்துக்கொள்ள தோனிய வினாடி,.... அப்படி எதுவும் தன்னால் செய்ய முடியாமல் போவதையும் உனரமுடிந்தது. உடம்பு கட்டையாய் இறுகிப்போய் கிடக்க, லேசாய் சூழல் புரிந்து யோசிக்கும்பொழுதுதான் தான் செத்துபோய்விட்டதாய் புத்திக்கு எட்டியது கிழவிக்கு.

'அட...!ஆக வேண்டியத பாருங்க....சீக்கிரம்...!’-என்று யாரோ பறபறக்க...கொஞ்சநேரத்துக்கெல்லாம் பறைகள் அதிர, மட்டி ஊதுவத்திகளும், பன்னீர் பாட்டில்களும், சாராய நெடிகளும் கலந்து ஒரு எழவு வீட்டுக்குரிய சூழலை கொண்டுவந்து சேர்த்துவிட்டிருந்தது. அந்த அதிகாலை வேளையிலேயே யார் யாரோ எங்கெங்கோ ஓடினார்கள். தகவல்கள் கொடுக்க ஊர்களுக்காய் ஆட்கள் பிரிந்து பறந்து கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் தன் புருசன், வடமலை கிழவனைப்பற்றி வாய் திறந்து பேசாமலிருந்தது ஏமாற்றமாயிருந்தது லட்சுமி கிழவிக்கு.

யாருமே இந்தநேரத்தில் கிழவனைப்பற்றி நினைக்க மாட்டிங்கறாங்களே என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது. ஒரு வேலை கிழவனுக்கு தெரியாமலே தூக்கி போட்றுவாங்களோ - என்றுகூட பயம் வந்தது. அந்த பாழாப்போன மனுசன் இப்போ எங்க சுத்திக்கிட்டிருக்கோ கடவுளே....!

கிட்டதட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டது புருஷனிடம் கோபித்துக்கொண்டு கிழவி இங்கே வளர்புரத்தில் மகள் வீட்டுடன் வந்து தங்கி. மகள் பூங்கோதையை தன் தம்பிக்கே கட்டிக்கொடுத்திருந்ததில் இப்படி ஒரு வசதியும் அமைந்துபோனது.

புருஷனையும்...,ரெண்டு ஆம்பள புள்ளைகளையும் விட்டுட்டு கிழவி இப்படி மக வீட்டோட வந்து இத்தனை காலமும் இருந்ததுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கத்தான் செய்தது. ஊரைப்பொருத்தவரை காரணம் சாதாரணமானதுதான். அதனால்தான் இன்றுவரை ‘கிழவிக்கு ஆனாலும் இவ்வளவு அழுத்தமும்,ரோசமும் கூடாது.அப்படி என்ன ஊர்ல உலகத்துல இல்லாதத அந்த கிழவன் சொல்லிட்டாரு.?- என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருந்தது. ஆனால் லட்சுமி கிழவியை பொறுத்தவரை அன்றைக்கு கிழவன் ஏரிக்கரையில் சொன்ன அந்த வார்த்தை....! 'த்தூ....! இனி கட்டைக்கு போற வரைக்கும் உம்மொகத்துல முழிக்கமாடேன்யா நானு...! என் சாம்பல் உனக்கில்ல, முன்ன செத்தா உன் சாம்பல் எனக்கில்லன்னு...நெனச்சுக்கோ....!'- என்று கட்டின துணியுடன் மகள் வீட்டுடன் வந்து சேர்ந்தவள்தான். பத்து வருஷம் பறந்து போய் விட்டது.

இன்னைக்கு செத்து விறைத்துப்போய் கிடக்கும்போதுகூட உறுத்தலாகத்தான் இருக்கிறது கிழவிக்கு. இந்த கடைசி நேரத்திலாவது கிழவன் வந்துரமாட்டானா என்று மனசு துடிக்கத்தான் செய்கிறது இப்பவும். 'அய்யோ....! எப்படியாவது கடவுள் அருளால் வந்துதொலைக்கனும் அந்த மனுஷன். ஏதோ வாய் வார்த்தை வாயிலிருக்க அப்படி ஒரு சொல்லை அன்னிக்கு அந்த மனுஷன் சொல்லிப்புட்டாலும் பொறவு வறுத்தப்பட்டு, என் காதுக்கு வந்து சேர்ற மாதிரி, நாலுபேருகிட்ட பெனாத்திகிட்டுதான இருந்துச்சு. கிழத்துக்கு எப்பவுமே நாக்குல சனி. ஏதாவது ஒண்ணுகெடக்க ஒண்ணு சொல்லிப்புட்டு பொறவு தவிக்கறதுதான் அதோட வழக்கம்.

கிழவிக்கு புருஷனோட நினைவுகள் விரிய விரிய தவிப்பு அதிகமாகிக்கொண்டிருந்தது. இப்போது யாரோ சிலபேர் தன் உடலை அப்படியும் இப்படியும் புரட்டி சுற்றிலும் ஜஸ் கட்டிகளை அடுக்கினார்கள். கிழவிக்கு இவ்வளவு கவலைக்கிடையேயும் சிரிப்பாய் இருந்தது. எத்தனையோமுறை பேரன் முருகேசுவுக்கு குச்சி ஜஸ் வாங்கி கொடுக்கும்போதெல்லாம் தனக்கும் ஒன்று வாங்கி சூப்ப வேண்டும்போல இருக்கும். ஆனால் யாராவது பார்த்துவிட்டால் போச்சு என்கிற பயத்தில் கஷ்டப்பட்டு ஆசையை அடக்கிக்கொள்ள வேண்டியதாய் ஆகியிருக்கிறது. இப்படி அடக்கி அடக்கி வைத்த ஆசைகள்தான் இப்போது உறைந்துபோய் தன் உருவத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பதாய் பட்டது கிழவிக்கு. இனி இது மண்ணுக்குத்தான்.

'ஐஸ்' பற்றிய நினைவுகளைத் தொடர்ந்து பேரன் முருகேசுவை நினைத்துக்கொண்டாள். அப்போதுதான் கவனித்தாள் .தலைமாட்டில் நின்றுக்கொண்டு அவ்வப்போது பாட்டியை தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டிருந்தான் முருகேசு. அய்யய்யோ இந்தப்புள்ள இனி நான் இல்லாம ஏங்கி போயிடுமே...என்று தோனிய வினாடி, வாரி அணைத்துக்கொள்ள எத்தனித்து...தன் உடலும் அதன் இயக்கமும் தன் கட்டுப்பாட்டில் இல்லாததை உணர்ந்து மனம் சோர்ந்தாள்.(மனம்..?).

சற்று நேரத்துக்கெல்லாம் கூட்டம் ஏகத்துக்கு கூடிப்போயிருந்தது. தன் சாவுக்கு இத்தனைபேர் கூடுவார்களா என்பது கிழவிக்கே சற்று ஆச்சரியமாய்தானிருந்தது.

திடீரென பேரமைதி நிலவ, ’இதுவரைக்கும் போதும்’-என்கிறதாய் மூக்கை முந்தானையில் துப்புற துடைத்துக்கொண்ட பெண்கள் பாட்டியிடமிருந்து கவனத்தை திருப்பிக்கொண்டு பக்கத்து பெண்களிடம் புருஷன்,குடும்பம்,குட்டி, என குசலம் விசாரித்துக்கொள்ளஆரம்பித்தனர். தப்படிப்பவர்கள்கூட ஓரங்கட்டி ஓய்வெடுத்துக்கொண்டார்கள். கிழவிக்கு இன்னைக்கு தேதிக்கு எண்பது வயசாவது இருக்கும். கல்யாண சாவுதான...! -என்கிற தொனி எல்லோருடைய பேச்சிலும் அசைவுகளிலும் தொற்றிக்கொண்டு, அவரவர் நீண்ட நாளுக்குப்பிறகான, தங்களுக்கிடையேயான- சந்திப்புகளை கொண்டாடிக்கொண்டிருந்தனர். திடீரென ஏதாவதொரு புது வருகை தெரு முனையிலிருந்தே ஒப்பாரியுடன் ஓலமிட்டபடி ஓடிவர, தூரத்தில் குழுமி உட்கார்ந்தபடி அரட்டை அடித்துக்கொண்டிருந்தவர்களில் மூத்தவர்களான சில பெண்கள் நிர்பந்தமாய் சலிப்புடன் எழுந்துவந்து மீண்டும் ஒப்பாரியுடன் மூக்கு சிந்த ஆரம்பித்தார்கள்.

மீண்டும் ஒப்பரிப்பெண்கள் சலிப்புறுவதும் ஒரு பேரமைதி நிலவுவதுமாய் நகர்ந்துக்கொண்டிருந்தது இழவு.

’’என்னப்பா கெழவனுக்கு சேதி போச்சா இல்லயா..? ’’ -என்று யாரோ தலைமாட்டில் கேட்கவும், சட்டென கூர்மையானாள் கிழவி.

’’நீ வேற…,விதி எப்படி வெளயாடுது பாரு! கெழவி சாபம் சும்மா விடுமா?...கெழவி நெனச்ச மாதிரியே இது இங்க கட்டையப்போடும்போது அந்த கெழவன் , கெழவியோட சாபம்...., ஊர் தங்கவிடல. முந்தாநாள்தான் காசி ராமேஸ்வரம்-னு கெளம்பி போச்சாம் கெழம். கெழவி ஆசப்பட்டமாதிரியே ஆய்போச்சு பாரு !’’

அடப்பாவிங்களா…! நீங்களா…, இப்படி ஒரு நெனப்பு நெனச்சுக்கறாதாடா..? என் மனசு கெடந்து துடிக்கற துடிப்பு எனக்குதாண்டா தெரியும். எதோ கோவத்துல அந்தாளு பேசுன பேச்சும், நான் எடுத்த முடிவும்…,முடிவான முடிவா நீங்களே முடிவுப்பண்ணி…., எங்களுக்கே தோனுனாலும் உங்களுக்கு பயந்தே,…. சாகறவரைக்கும் பிரிஞ்சே இருக்க வச்சிட்டீங்களேடா .

ஒரு வயசுக்குமேல புள்ளைங்களுக்கு பயந்து, ஊருக்கு பயந்து , உறவுக்கு பயந்து, ஒட்டி ஒரசிக்கவோ , சிரிச்சி பேசிக்கவோக்கூட முடியறதில்லையே எங்களால. பொம்மலாட்ட பொம்மைங்க மாதிரி பாவனையாத்தான வாழ்ந்துட்டு போக வேண்டியதா இருக்கு ! - எரிச்சலாகவும், அங்கலாய்ப்பாகவும் மனசு ஓடியது கிழவிக்கு.

இப்பொழுதுதான் சட்டென நினைவுக்கு வந்தது கிழவிக்கு. முந்தானாளிரவு சாமத்தில் சட்டென முழிப்பு தட்ட, மூத்திரம் போகவேண்டிய உணர்வில் திண்னையிலிருந்து எழுந்து புழக்கடை பக்கமாய் ஒதுங்கி இருட்டில் சேலையை தூக்கி நின்றுக்கொண்டிருக்க , -வேலி முள்ளுக்கு மறுபக்கம் ஏதோ உருவம் அசைவதை பார்த்து ’பட்’டென பதறிப்போய் சேலையை நழுவவிட்டவள்,

“அடச்சீ...கருமமே...யார்ராவன்...அங்கிட்டு..!...த்தூ...நாதேரி...” என்று கத்த, சட்டென்று நகர்ந்து, விரைசலாய் நடந்து, அங்கிருந்து அகன்றது அந்த உருவம்.

இருட்டில் மறைந்த அந்த உருவத்தை கைகளை புருவத்தில் குவித்து- உத்து, உத்து பார்த்த கிழவிக்கு....அந்த ஜாடை...பகீரென்று நெஞ்சில் உறைத்தது. ‘ அட...நாசமாப்போக...அந்த ..கெழவனாட்டமில்ல இருக்கு..!

மறுபடியும் வந்து திண்னையில் சாய்ந்தவளுக்கு தூக்கம் பறிபோனது.

இப்பொழுது நினைத்துக்கொண்டாள், ஒரு வேலை தூரதேசம் போகும் முன் மன அங்கலாய்புல நம்மள பாக்கறதுக்குதான் அப்படி இருட்டுல வந்து நின்னிருக்குமோ..அந்த ஆளு..?

இப்போது நெஞ்சை அறுப்பது போல் இருந்தது கிழவிக்கு. ‘அடச்சே...அந்தாளுதான்னு புத்திக்குப்பட்டவுடனே...கூப்பிட்டு பேசியிருக்கலாமோ..! யாராவது பாத்துப்புட்டா கருமம் கண்றாவியாயில்ல போயிடும் ..! -ன்னு அன்னைக்கு நெனச்சதை யோசிக்கும்போது தன்மேலேயே எரிச்சலாய் இருந்தது கிழவிக்கு.

புருஷன்கிட்ட பேசறதுக்கு…, அடுத்தவங்களுக்கு ஏன் பயப்படனும்? என்று மனசுக்குள் எதிர் கேள்வி கேட்டுக்கொண்டாலும், வயசாகிப்போனாலே ..இந்த சமூகத்துல ஆசாபாசங்கள மறைச்சுகிட்டு நடிப்பா வாழ்ந்துட்டு போகவேண்டிய நிர்பந்த யதார்த்தமும் புரியத்தான் செய்தது. ஜம்பது வயசுக்கு மேல நம்மளோட அசைவுகள அடுத்த தலமுறதான தீர்மானிக்குது. நாமளும் என்ன நினைப்பாங்களோ ஏது நினைப்பாங்களோன்னு, போலியா வாழ்ந்துட்டு போகவேண்டியதாதானே இருக்கு.

என்னதான் கிழவனை பிரிஞ்சு வந்துட்டாலும் அந்த ரோஷமும் கோபமும் ஒரு வருஷம் கூட தாக்குப்பிடிக்கல. ஒரு உப்பு கொறவுன்னாலும் ஒரப்பு கொறவுன்னாலும் குழம்பு கிண்ணியை தூக்கி அடிக்கற கிழவன் ,…இப்போ மருமக வைக்கிறத சத்தமில்லாம தின்னுட்டு வளய வர்றத கேள்விப்பட்டு எத்தனையோமுறை ரோஷம் உடைந்து போய், புருஷன் வீட்டுக்கே கிளம்பி போய் விடலாமா என்று தோனத்தான் செய்தது. அப்பவும் இப்படி புள்ளைங்களுக்கும், ஊருக்கும் பயந்துகிட்டுதான் சும்மா கெடக்கவேண்டியதாப்போச்சு.

’எதுக்கு இப்போ போய் அந்த பழய கண்றாவியெல்லாம் நெனைச்சுகிட்டு…’-பட்டென நினைவுகளை உதறிக்கொண்டாள் கிழவி.

திடீரென்றுதான் கவனித்தாள். இப்போது சூழலில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்தது. தூக்கு…தூக்கு… என்று பல குரல்கள் உயர , பறைகள் முன்னைவிட உச்ச ஸ்தாயில் முழங்க, மகள் பூங்கோதை ஓவென கதற, சிலர் முனைந்து வந்து கிழவியை தூக்கி பாடையில் வைக்க , முதிய பெண்கள் குலவையிட ,கடைசி பயணம் தொடங்கியது லட்சுமி கிழவிக்கு.

தெருமுனையில் தலமாடு திரும்பி ,…இடுகாட்டு வாசலில் அரிச்சந்திரனிடம் பாடை இறக்கி பாட்டு பாடி,அனுமதி வாங்கி, தகன மேடையருகே மீண்டும் பாடை இறங்கி வாக்கரிசி..,பால் சடங்குகள் முடிந்து..,வெட்டியான் ‘ வேற யாராவது இருக்கீங்களா…வேற யாராவது …வுட்டு போச்சா ..’என்று கூவிக்கொண்டிருக்கும்போதுதான்…திடீரென்று தூரத்தில் ஒருவன் ஓடி வந்தபடியே கூவினான்

“யேய்..,அந்த கெழவன் வந்துகிட்டிருக்கான்யா…!”

“என்னயா…சொல்ற…?”

“எங்கயோ தூரதேசம் கெளம்பி போனவன் விசயம் தெரிஞ்சு போய், அரக்க பறக்க ஓடிவந்துட்டிருக்கான்..!”

“யேய்..போதும்..போதும்…நிறுத்து…! யோவ்…தூக்குங்கயா…தூக்கு…!தூக்கி தகன மேடையில வைங்கப்பா..! அந்த கெழவன் வர்ரதுக்குள்ள சட்டு புட்டுன்னு கொள்ளிய வைங்கப்பா…! அப்பறம் அந்த கெழவி சபதத்துக்கு அர்த்தமில்லாம போயிரும். அந்த கெழவன் மூஞ்சில முழிச்சா ,கெழவி கட்ட... வேகாம போயிடும். அந்த பழி பாவம் நமக்கு வேண்டாம். சீக்கிரம்…சீக்கிரம்.., தூக்குங்க…!”

அட கொல்லைல போறவன்களே..!டேய்..நிறுத்துங்கடா…! அய்யோ …கொஞ்சம் பொறுங்கடா …அந்த மனுசன் மூஞ்ச கடைசியா ஒரு மொற பாத்துக்கறன்டா …! இல்லைனாத்தாண்டா என் கட்டை வேகாது…!

கிழவியின் அரற்றல் யார் காதிலும் விழாமல் போகவே…தட தட வென எரியூட்டும் காரியம் நடந்துக்கொண்டிருந்தது.

தூரத்தில் கிழவன் ஓடிவரும் பிம்பம் மங்கலாய் கிழவிக்கு தெரியத்தொடங்கிய வினாடி, கால் மாட்டில் வைக்கப்பட்ட கொள்ளி , திகு திகுவென உடலெங்கும் பரவத்தொடங்குவதை உணர முடிந்தது.

“அய்யோ…அய்யோ…” - கிழவி மனசு அலற..அலற…, தீ..உடலெங்கும் பரவி…, கொஞ்ச கொஞ்சமாய் பிரபஞ்ச காட்சிகளும்…அந்த கோணங்கள் அற்ற பார்வையுணர்வும் தேய்ந்து அழிந்து….முற்றிலும் சூன்யமாயிற்று..!

Thursday, 15 January 2009

அலைகள்


திருப்பத்தூர்

16.10.93

அன்புள்ள பூரணி அக்காவிற்கு! சிவகுமார் எழுதுவது,

வழக்கம்போல் நலம் நலமறிய ஆவல்

என்று தொடங்க முடியாத கடிதமக்கா இது.

அக்கா ஞாபகமிருக்கிறதா? இங்கே திருப்பத்தூரில் பக்கத்து வீட்டில் நீங்கள் குடியிருந்தபோது உங்களுக்கு எனது நண்பன் ஒருவனை அறிமுக படுத்தியிருக்கிறேன். வெங்கி.வெங்கடேசன்.

அந்த நாட்களில் நாம் எதை குறித்துதான் பேசவில்லை!

அலைகளைப்பற்றி பேசியிருக்கிறோம் நினைவிருக்கிறதா? அதன் அழகு.....கொடூரம்...விசித்திரம் குறித்து எவ்வளவு பேசியிருக்கிறோம்! எதிரெதிராய் ஏன்,அடுத்தவருக்குத் தெரியாமல் இரகசியமாகவும் கூட எவ்வளவு விவாதித்திருப்போம்!

அப்படி ஒரு அலை அந்த வெங்கடேசனை வாரிச்சுருட்டிக்கொண்டு போய்விட்டது அக்கா!

போனவாரம் நான்காம் நாளின் காலை பொழுதில் ஒரு தூறல் நேரத்தில் அந்த வெங்கடேசன் செத்துப்போய்விட்டான்.

'ஐயோ!'....'ஐயோ...!'என்று முகத்திலறைந்து கொண்டு ஓடினோம்.' ஐயோ...சிவா! வெங்கடேசனைப்பாரு!....எதையோ.....பூச்சி மருந்தாட்டமிருக்கு...குடிச்சிட்டான்..ஐயோ எம்புள்ளய பாருப்பா!'-அவனுடைய அம்மா அலற.....மூக்கில் இரத்தக்கோடுகள் இறங்கி சொட்டிக்கோண்டிருக்க...மல்லாக்கக் கிடந்தான் என் வெங்கடேசன்.

'தூக்கு....தூக்கு...!உயிரிருக்கு....உயிரிருக்கு! 'ஒரு கோடி உதடிகள் என் முதுகில் படபடக்க அநிச்சையாய் தூக்கிக்கொண்டு ஓடினோம்.

மூக்கின் இரத்தம் ஒழுகி எங்கள் தோள்பட்டையில் நசநசக்க வெளியே ஓடி வந்தோம். சிகப்பாய்...கருஞ்சிவப்பாய் வெங்கடேசனின் இரத்தம்.

வானத்தை யார் கிழித்துப்போட்டார்களோ தெரியவில்லை. சடசடவென்று இரத்த பொட்டுகளாய் முகத்தில் அறைந்து அறைந்து வீசலாய் இறங்கியது இரத்த மழை. பிரபஞ்சமே இரத்த உருவமாகி உருகி ஒழுகியது. அரை நொடியில் காற்றுவெளிகள் சிவந்து' ஓ 'வென அலறியது.

இரத்தமாய் ஊத்துகிற மழை வலுத்துப்போக ரோடெல்லாம் சொதசொதப்பாய் இரத்தச்சேறு பிசுபிசுப்பாய் பாதங்களை பற்றிக்கொள்ள ஓட முடியாமலாய் உணர்ந்தேன். மழையின் இறைச்சலூடே வெங்கடேசனின் ஏளன சிரிப்பு ஒலிகள் பட்டுத்தெறிக்க...தெறித்த ஒலி துண்டுகள் தூறப்போய் இடிகளாய் எதிரொலித்தது.

நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறோமோ தெரியவில்லை. கால இடைவெளிகள் இழைகளாய் நீண்டு நீண்டு எங்களை கட்டி நிறுத்துகிறதாய் உணர்ந்தேன்.

'வெங்கடெசு.....வெங்கடேசு' தெருவின் கதவு எண்கள் கதறி கதறி நாலா திசைகளையும் நிரப்பிக்கொண்டு வந்த்து. சட்டென வெளிச்சம் கருத்துப்போய் பொழுது சாய்ந்த்து. வெளிச்சத்தை சுருட்டி அக்குளில் இடுக்கிக்கொண்டு சிரித்தான் வெங்கடேசு.

மழை இன்னும் வலுத்து காற்று இனுக்குகளின் இடைவெளிகளை நிரப்ப...ஈர அடர்த்திகளில் திசைகள் தீப்பற்றி எரிந்த்து. எல்லா திசைகளுக்கும் ஒரே முகமாகிப்போக,ஜாடை வித்தியாசப்பொராட்டத்தில் ....தினறினோம்.

திசைகளையும் திருடி சுருட்டிக்கொண்டு வெங்கடேசு சிரித்தான்.

வானத்தை கூட வெங்கடேசுதான் திட்டமிட்டு கிழித்திருப்பானோ? இப்படி இரத்தம் கொட்ட செய்தானா? எல்லாமே அவனுக்கு முடிந்திருக்கிறது. திட்டமிட்டு செய்ய முடிந்திருக்கிறது.

உன்னாலே என்னாலோ எதையும் திட்டமாய் செய்துவிட முடியாது பூரணி அக்கா.கற்பனாவாத கல்குதிரை ஏறி திசை குழம்புபவர்கள் நாம். குதிரை ஓட விட்டு அதன் முதுகில் கல்லாய் சமைந்திருப்பவர்கள். இயல்பாய் சூழல் மாற...குதிரை ஓடியதாய் ஏமாறுபவர்கள்.

நிறங்களின் பெயர்களை மாற்றி வெண்டுமானால் பாவனைகாட்டலாமே தவிர நிறங்களையே மாற்றிவிட முடியுமா என்ன?! எந்த பூ நிறம் மாறி பூத்திருக்கிறது நம் தோட்டத்தில். இயல்பில் இழைந்துபோன வாழ்க்கையிலிருந்து விலகி விலகிப்போய் நீயும் நானும்தான் ஏமாந்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது அக்கா! நான் சுமந்து ஓடிக்கொண்டிருக்கிற வெங்கடேசுதான் ஒரு வேளை சரியோ...?

நேரங்களில் நிறை ஏறிக்கொண்டிருந்தது. வெங்கடேசன் கணத்துப்போய்...வெற்றியடைந்து கொண்டு இருந்தான். நம்பிக்கைக்கண்களுக்கு நிறங்களின் பேதம் குழம்பிப்போய்விட....எல்லா திசைகளின் அடர்வுகளிலும் சிகப்பு தீற்றல்கள்தான் தெரிந்தது. ஒழுகி வழிந்தது. காதோரம் வெங்கடேசு சிரிப்பதாய் தோன்றியது. சிரிப்புக்கூட சிவப்பு பிரவாகமாகி பிரஞைகளுக்காய் நுழைந்து அடர்ந்தது. சிவப்பு அடர்ந்து..அடர்ந்து.....கருத்தது. கருப்பு.....கருப்பு...சிவந்த கருப்பு எதை சொல்கிறது...?

சிவப்பின் ஆழம் கருமையா? அப்படித்தானா? ஞானம் தோற்று ஓட அங்கே சட்டென விழுந்த ஒரு ஓட்டையில் வழுக்கி உள்ளே...உள்ளே...ஆழபயணித்து ....பயத்தில் அலறுகிறது மனசு.

ஆழமாய் வழுக்கி போக போக கருமையின் அடர்வு அதிகமாகி..சூழல் உணரும் முயற்சியில் விழிகள் தோற்றுத்திணற.....கண்களை காணவில்லையாய் உணர்ந்து உயிர் உறைகிறது. இமைகளை எவ்வளவு விரித்து பார்த்தாலும்...அடர்ந்த கருப்பே உள்ளிரங்கி நிறைகிறது. இழைஇழையாய் இணைந்து இறுகி அடர்ந்து 'ஓ' வென ஓலமிடுகிறது. அவ்வளவுதானா? வெங்கடேசா....அவ்வளவுதானா?இருட்டிவிட்டாயா?....இந்த இருட்டில் எந்த ஒரு இழையாய் இணைந்திருக்கிறாய்....?ஒரு துணுக்காய் விண்டு தொங்கினாலும் முனைபற்றி இழுத்துவிட முடியும்....எங்கே....எங்கே...?

நான் வேண்டாமா வெங்கடேசு உனக்கு? உண்மையில் நான் வேண்டாமா? நான் வரைந்து வைத்திருந்த ஒரு படத்தை கேட்டு கேட்டு தொந்தரவு செய்வாயே-அம்மாவின் கணத்த மார்புகளை பிடித்து பசியாறும் ஒரு குழந்தையின் படம்- அது வேண்டாமா? அதை நீ கேட்டபோதெல்லாம் மறுத்து உன்னை விரட்டியிருக்கிறேன். மறந்துவிடு!வெங்கடேசு...பழசையெல்லாம் மறந்துவிடு. இப்போது கண்டிப்பாக தருகிறேன். வா! வந்துவிடு!

எனது வார்த்தைகளின் ஒலிகள் அந்த குருட்டு பிரதேசத்தின் இருட்டு சுவரெங்கும் மோதி மோதி எதிரொலித்துக்கொண்டிருக்க....அந்த கருத்த திட இருட்டின் ஓர் இழை மட்டும் பட்டென அறுபட்டு தொங்கியது. அந்த இழை விடுபட்ட இடைவெளியிலிருந்து எனது ஓவிய அம்மா இறங்கி வந்தாள்...எங்கே என் பிள்ளை...?எங்கே என் பிள்ளை...? என்றபடி.

சடாரென்று கச்சை அவிழ்த்துக்கொண்டு விம்மிய மார்பு காம்பிலிருந்து ஒரே ஒரு துளி பால் அந்த இருட்டு பிரதேச தரைகளில் விழுந்து தெரித்து சிதறியது.

நொடியில் எல்லாம் விலகி பிரபஞ்சம் முழுதும் பால் வெள்ளையாய்....வெளிச்ச கீற்றுகளால் மின்ன.....நான் சுதாரிப்புக்கு வந்த போது நாசித்துவாரம் எங்கும் ஆஸ்பத்திரி வாடை ஆக்ரமித்திருந்தது.

'இறக்கு....இறக்கு....மெல்ல....மெல்ல...'-கூட்டம்

'டாக்டர்....எம்புள்ள...எம்புள்ள...'-வெங்கியின் அம்மா

ஆஸ்பத்திரி! பால் வெள்ளை நிறத்தில் அவர்களும் கட்டில்களும் மனிதர்களும். கருப்பு இருட்டினூடே எப்போது இந்த வெள்ளை வெளிச்ச விளிம்புக்கு வந்தோம்? ஒரு துளி முலைபாலின் சிதறலின் போதா?

'என்னத்த.... குடிச்ச....?....தம்பீ...சொல்லு...என்னத்த...குடிச்ச'-டாக்டர் வெங்கடேசனின் காதோரமாக கத்த'....அலைகளை....அலைகளை குடிச்சேன்'-என்றான் வெங்கடேசன். கல்லாய் சமைந்திருந்த வெங்கடேசன். உதடசையாமல் உருவம் அசையாமல் எங்கோ தூரத்தில் ஏதோ ஒரு மேக கூட்டிலிருந்து சத்தமாய் கத்தி சிரித்தான். ஆனால் கட்டிலில் கல்லாய்.

டாக்டர் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தார். கல்லை புரட்டி புரட்டி ஈரம் தேடினார்.' என்ன தம்பீ குடிச்ச...இத பார்...என்னை பார்....டாக்டர் பார்.....சொல்லு...உணர்வு தெரியாதா...?நான் கிள்ளறது தெரியுதா...?தம்பீ....தம்பீ....!'ஆளாளுக்கு கல்லை புரட்டினார்கள். உளிகளாய் செதுக்கினார்கள்.

தொடர்ந்து கல்லில் விழும் உளிகள் . ஒன்று மழுங்க...இன்னொன்று...மழுங்கி மழுங்கி...மற்றொன்று...அறையெங்கும் 'ஓ' வென்று கதறி, ஓய்ந்து விழும் உளிகளின் ஒலிகள் எதிரொலித்த்து. கல் சிதையவில்லை. ஒரு துணுக்கு கூட தெரித்து விழவில்லை. ஆனால் உளிகளின் ஓலத்தில் நான் சிதைந்தேன். சிதைந்து சிதறி அறையெங்கும் நிறைந்தேன். மனித பெருமூச்சுகளின் உஷ்ண காற்றில் கலைந்து சிதறி பறந்தேன்.

'உங்களுக்கெல்லாம் தெரியாது. அலைகளை உங்களுக்கு தெரியாது. அலைகள்னா சிவாவுக்கு தெரியும் என் அலை எதுவென்று சிவாவுக்கு தெரியும்'-வெங்கடேசு மேக கூட்டிலிருந்து மீண்டும் குரலெடுத்து கூவினான்.

'ஐயோ....!' என்றபடி தலையை பிடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தேன்.

அக்கா! நமக்குத்தெரியும். நம் நண்பர்கள் நிறையபேர் அலைகளூடே மறைந்து போயிருக்கிறார்கள்.மீண்டு வந்து கதை சொல்லியிருக்கிறார்கள். தங்களை வாரிச்சுருட்டிக்கொண்டு போன அலைகளின் பலம் சொல்லி,குணம் சொல்லி.....சொக்கியிருக்கிறார்கள்.

தொலைவிலிருந்து எல்லா அலைகளும் ஒரே நிறமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். இறங்கி ஆட்பட்டு மூழ்கியபின் நிறம் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வெங்கடேசனை சுருட்டிக்கொண்ட அலையின் நிறம் சிகப்பு. இரத்தம் குடித்த நெருப்பின் சிகப்பு. நெருப்பு அலை பெயர் ராதாவோ சீதாவோ என்று ஞாபகம்.

கானல் அலைகளில் கால் நனைக்க ஓடி-கானாமல் போன உங்கள் கல்லூரி தோழி பாகீரதி!-அவள் கதையை ஒரு வெக்கை நிறைந்த மதிய பொழுதில் எனக்கு சொல்லியிருக்கிறீர்கள் நினைவிருக்கிறதா?

என் நண்பன் செல்வம்கூட அவனை சுருட்டிக்கொண்டு போய் கொன்று போட்டு விட்ட அக்னி அலைகளைப்பற்றி சொல்லியிருக்கிறான். அது சுட்டபோது சுகமாய் செத்து போனதாய் கூறியிருக்கிறான். மறுபடியும் தான் பிழைப்பதெல்லாம் இனிமேல் இல்லையென்றும் இப்படியே செத்துப்போய் உலவுவதே உத்தேசம் எனக்கூறி சிரித்திருக்கிறான்.

இன்னும் நிறைய பேர் நிறைய சொல்லியிருக்கிறார்கள். ஆனால் என் மதில்கள் எனக்கு அலைகளை பற்றி எதுவுமே சொன்னதில்லை.

என் மதில் சுவருக்கு மறுபக்கம் அலைகள் அறைந்ததை உணர்ந்திருக்கிறேன். அலறலாய் ஓடி வந்து பளீரென்று மோதி சிதைந்த அலைகள்...

வெறுமனே ஈரமாய் தொட்டுப்போன அலைகள். சலிக்காமல் ஓடி ஓடி வந்து சதா சுவர் நனைத்த அலைகள். எப்போதும் ஈரம் நிலைத்திருந்ததாகவே எனக்கு நினைவில்லை.என் மதில் சுவறில்தான் எவ்வளவு வெக்கை! 'ஆ' வென வாய் பிளந்து அத்தனை ஈரத்தையும் விழுங்கி….விழுங்கி ஜீரணித்து விடுகிற வெக்கை.

சில வேளைகளில் அலைகளின் தொடர்ந்த தாக்குதலில் மதில் சுவர் ஊறிப்போய் ஈரம் மறுபக்கம் வந்து தலை காட்டியதும் உண்டு. குழம்பிப்போய் மதில்மேல் ஏறி அதன்மீது பூனையாய் நடந்திருக்கிறேன். மறுபக்கம் அலைகள்' ஹோ' வென கை வீசி அழைத்திருக்கின்றன. மாற்றி மாற்றி நிற ஜாலங்கள் காட்டி ஏமாற்றியிருக்கின்றன.குதித்து விட தோன்றினாலும்…ஞானம் குழைத்து கட்டப்பட்ட மதில் சுவர்களில் பசைகளாய் பாதம் ஒட்டிக்கொண்டுவிட….மதில் மேலேயே அசையாமல் நின்று கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு ஜாக்கிரதையாய் பழைய நிலைக்கே இறங்கி விடுவதுதான் வழக்கமாகிவிட்டிருந்தது.

ஆனால் இப்போது வெங்கடேசனை இந்த நிலைக்கு ஆட்படுத்திய அலைபற்றி எனக்கு தெரியும். நெருப்பு அலை. இழுத்து அணைத்து சாம்பலாக்கி விடுகிற அலை. எப்போதும் இறை தேடுகிற அலை. என்னைப்போல்…..நம்மைப்போல் வெங்கடேசனுக்கு மதில் சுவரும் இல்லை…மண்ணாங்கட்டியும் இல்லை. வெற்று வெளி கரை நனைத்து நனைத்து…அலை விழுங்கியே விட்டது. எல்லாம் முடிந்தே விட்டது.

நேற்று வெங்கடேசனுக்கு 7ம்நாள். அவனது ஆத்ம சாந்திக்காக வேணும் சொல்லித்தானே தீரவேண்டுமென முகவரி தேடி போனேன். தெருவின் கடைசி வீட்டை காட்டினார்கள். மொட்டைமாடியில் வினாடிக்கொருமுறை தாவணி திருத்திக்கொண்டு அவள் ,எதிர் வீட்டு மொட்டை மாடியில்,அடிக்கடி தலையை கோதியபடி வாயில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டு ஏதோ சைகை செய்தபடி எவனோ.

வெங்கடேசு எழுதிய

கடைசி கடித்ததில் குறிப்பிட்டிருந்தது இவனைத்தானா?

புதிய கரை!

வெங்கடேசனின் ஆத்மா சாந்தியடையாவிட்டால்தான் என்ன வெறுமனே திரும்பி நடந்தேன்.