Showing posts with label நான் சினிமாவுக்கு வந்த கதை. Show all posts
Showing posts with label நான் சினிமாவுக்கு வந்த கதை. Show all posts

Monday, 12 January 2009

என் சினிமாவுக்கு உதவிய சித்தாள்கள்..?

இந்த தொடரை இதோட நிறுத்திக்கலாம்னு உத்தேசித்திருக்கிறேன்...!
காரணம்....,

இருங்க..! அதுக்கு முன்னாடி என் தோழமைகள் அனைவருக்கும்

என் இனிய புத்தாண்டு....,
பொங்கல் நல்வாழ்த்துகள்..!


நான் இப்போ இயக்கிகிட்டிருக்கிற 'பால்' திரைப்படம் பாதியில் அப்படியே நின்னுபோச்சுங்க...! வழக்கமா.... சினிமாவுல நொந்துகொள்கிற Finance பிரச்னைதான்.

100ஆண்டுகால இந்திய.....75வருடகால தமிழ் திரைப்பட வரலாற்றில் திருநங்கைகளை மையப்படுத்திய.....ஏன் ஒரு திருநங்கையையே கதாநாயகியாய் கொண்ட முதல் திரைப்படம் என்கிற அடிப்படையில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும்...இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கைகளும்,மீடியாக்களும் கொண்டாடி...எங்களை புளகாங்கித புல்லரிப்பில் திளைக்க வைத்திருக்க.....

படம் பாதியில் நின்றுபோய்.....என் உதவியாளர்களெல்லாம் மன உளைச்சலில் வருத்தம் தோய்ந்த முக்ககுறிகளுடன் அலுவலகத்தில் என் எதிரே புலம்பியபடி நடமாடிக்கொண்டிருக்க....

நான் இப்படி ஒரு நையாண்டித்தொடரை எழுதிக்கொண்டிருப்பது....கூச்சமாய் உணர்கிறேன். விடியும் என்ற நம்பிக்கையுடன் கொஞ்ச காலம் இதை நிறுத்தி வைப்போம்..!

நிற்க....நாளை போகி..! பழையன கழிதல்..! ஆனால் முரண்பாடாய் ஒன்று தோன்றியது. விளைவு....பரணில் தேடி தூசுதட்டி எடுத்த சில போகிப்பொருள்களை எரிப்பதற்குப்பதில்...நீங்கள் கொறிப்பதற்கு கொடுத்தாலென்ன...?

சிவா.....எதாவது தொடர்ந்து எழுதுங்க...நிறுத்தாதீங்க..! என்று சொன்ன என் தோழர் ஜெயகாந்தனிடம் கொடுத்து....இடுகையிட சொல்லிவிட்டு செல்கிறேன். நாலஞ்சு நாள் கழிச்சு வரேன்.....

எதை எதை எடுத்து போடறாரோ...படிச்சுட்டு பின்னூட்டம் அடிச்சு வையுங்க..! வந்து பார்க்கிறேன். மீண்டும் சந்திப்போம்...! வாழ்த்துகள்..!

கூடவே உலகின் எந்த மூலையிலிருந்தாலும்.....பைனான்சியரோ....,தயாரிப்பாளரோ....., கிடைத்து 'பால்' படம் மீண்டும் வளர....வாழ்த்துங்கள்.....
உங்கள் நல்வாழ்த்து பலிக்க கடவ...!


Saturday, 10 January 2009

என் சினிமாவுக்கு உதவிய சித்தாள்கள்-02

ந்த தொடரில் எனது அனுபவங்கள் காலவரிசைப்படிதான் அமையவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். முன்பின் கலைத்துப்போட்டு சொல்லும்போதும் இயல்பாகவே சுவாரசியமாகவும் அழகாகவும் ஒரு ஒழுங்கு நேர்த்தியில் அமைந்துவிட வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது.

சரி விஷயத்துக்கு வருவோம். முதல் படமே ஒரு பிரபல இயக்குநரிடமென அமைந்துவிட்டபோதும், தொடர்ந்து அங்கிருப்பதால் பெருசா எந்த பலனும் இல்லை என தெரிந்தபோது, புலிக்கு வாலாய் இருப்பதைவிட எலிக்கு தலையாய் இருக்கலாம் என்கிற நினைப்பில் புதுமுக இயக்குநர் கழுத்தில் என்னை பொருத்திக்கொண்டேன். நான் போனபோது இன்னும் ஒரு வாரத்தில் ஷூட்டிங் போகப்போகிறநிலையில் இருப்பதைப்போன்ற தோற்றத்தில் இருந்தார்கள். எனது கையெழுத்து அழகாய் இருந்ததால் டைரக்டரின் ஸ்கிரிப்ட்டை படியெடுக்கிற வேலையின்போது ஆங்காங்கே நான் சேர்த்து எழுதிய வசனங்களாலும், காட்சிகளாலும், ஈர்க்கப்பட்டு அவர் எனக்கு கொடுத்த சுதந்திரத்தின் காரணமாய், மொத்த கதையும இறுதியில் என்னுடைய கதையாகவே மாறிப்போனது தனிக்கதை.

அதைவிடுங்கள், நான் சொல்ல வந்த சம்பவம் ....அங்கே எனக்கு நேர்ந்த (இதை படித்துவிட்டு இந்த அனுபவத்திற்காக கூட அடுத்த சில நூறுபேர் உடனே ரயில் ஏறலாம்....வயது 25க்குள் இருப்பது சிறப்பு)

அந்த முதல் துணுக்குறலுக்குப்பிறகுதான் தெரிந்தது, இங்கே இதெல்லாம் அன்னாடங் காட்சி என்பது. ஒருநாள் அறையின் மூலையில் அமர்ந்து தீவிரமாக நான் எழுதிக்கொண்டிருக்க, டைரக்டர் மற்ற உதவிகளுடன் ஏதோ பிரதாபித்துக்கொண்டிருக்கும்போதுதான்..... அவள் உள்ளே நுழைந்தாள்.நடிக்கனுமாம். வாய்ப்பு வேணுமாம்.

டைரக்டரின் ஒரு நேர்த்தியான கண்ணசைவை புரிந்துகொண்டு உதவிகள் எழுந்து வெளியே போக, - ஆரம்பமாகியது டைரக்டருக்கு அவளுடனான இன்டர்வியூ.

நானும் எழுந்து போக எத்தனிக்க, டைரக்டரோ... கண்களால் என்னை கைதுசெய்து நீ பாட்டுக்கு உன் வேலையைப்பார்என்பதுபோல் பாவித்தார். கொஞ்சநேரம் அவர்களின் உரையாடல்களை காதில் வாங்கியும் வாங்காதபடியும் தீவிரமாய் எழுதிக்கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்தில் பேச்சரவமே அற்றுப்போய் பேரமைதி நிலவ...அதை உணர்ந்தாலும் தலையை தூக்காமல் ஸ்கிரிப்டில் லயித்துப்போய் இருந்தேன். தீடீரென மெல்ல ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாவதாய் உணர்ந்தேன். அறைக்குள் ஏதோ பாம்பு நுழைந்ததைப்போல் அந்த.....புஸ்....புஸ்....

துணுக்குற்று தலைநிமிர்ந்து பார்த்தவனுக்கு ....சில்லிட்டுப்போனது ....இல்லை...திடுக்கிட்டு.... இல்லை.... கால்களுக்கிடையே தரைநழுவி.... இல்லை.... சப்தநாடியும்....இல்லை....இந்த கருமமெல்லாம் ஏற்கனவே நான் கதைகளில் படித்த வார்த்தைகள். இது வேறு ஏதோ.....வார்த்தைகளெல்லாம் அந்த உணர்வை வெளிப்படுத்த உதவாது.

என்னுடைய அன்றைய 22வயதுவரை இப்படி எதுவும் எனக்கு முன்பின் நேர்ந்ததில்லை.

சிறுவயதில் ஒரேஒருமுறை வீட்டுமொட்டைமாடியில் காயப்போட்டிருந்த விறகுகளை எடுக்கப்போனபோது பக்கத்துவீட்டு கொல்லைபுறத்தில் இருந்து 'சிவா...சிவா...'என எனக்கு பரிச்சய குரல் ஒன்று கூப்பிட அவளிடமிருந்து அடுத்த வார்த்தை வருவதற்குள்....'இதோ வர்ரேன்கா...!'என்று அவசர அவசரமாய் நான் ஓடிப்போய் எட்டிப்பார்க்க (தன் வாயாலேயே தனக்கு சூனியம் வைத்துக்கொள்வதென்பது இதுதான்....! )

பேசாமல் இருந்திருந்தால் நான்பாட்டுக்கு விறகை எடுத்துக்கொண்டு கீழே இறங்கிப்போய் இருப்பேன். அவளே 'சிவா...சிவா'..ன்னு கூப்பிட்டு சூனியம் வைச்சிகிட்டா நான் என்ன செய்ய ..?

நான் ஓடிப்போய் எட்டிப்பார்த்தபோது, முகத்தில் சோப்புடன் கண்களை திறக்காமலே ....ஆனால் எல்லாம் திறந்த நிலையில், அந்த திகம்பரி நான் குளிச்சிக்கிட்டிருக்கேன் சிவா..! அந்தப்பக்கம் போ..என்று கதைசொல்லும்போது மிக இயல்பாய் ஒரு காட்சியை சொல்வதுபோல்...

நாசமாப்போச்சு....கடவுளே...கடவுளேன்னு ....(எதையாவது பார்த்து பயந்தா ஜூரம் வரும்ணுவாங்களே ...அந்த விநாடியே எனக்கு அடிக்க ஆரம்பிச்சது)

விறகுக்கட்டை மறந்துவிட்டு ....கால்கள் பின்ன...கந்தர்சஷ்டி கவசம் சொன்னபடி, இந்த 'கட்டை' அனிச்சையாய் கீழே இறங்கி ....

இதை தவிர வேறு அனுபவம் இல்லாத நிலையில்,...அதுவும் நின்று , அவதானித்து ரசிக்கிற மனதோ .... வயதோ...ஏன் recollection பண்ணிப்பார்க்ககூட நாகரீகம் தடுக்கிற உறவு.. அவளது உறவு... என்பதால்....

அதைவிட இந்தகாட்சி என்னை பயங்கரமாய் தாக்க .... 'அய்....ய்....யோ....ஓ ...!' என நீளமாய் அலறிவிட்டேன் நான்.

ஜாக்கெட்டில் எல்லா ஊக்குகளும் கழண்டுகிடக்க ....வெற்றுமார்பில் (திரண்டிருக்கவில்லை..! இது அதன்பிறகு டைரக்டரின் கமென்ட்...!) லயிப்புடன் கை ஓட்டிக்கொண்டிருந்த இயக்குநர் திடுக்கிட்டு என்னை திரும்பி பார்க்க

மந்திரிக்கவந்த பூசாரிமுன் தன்னை முழுதும் ஒப்புக்கொடுத்த ஒரு 'நல்ல' பேய்போல அவள் விழி உருட்டிக்கொண்டிருக்க.... ,

எனக்கு கழுத்தில் இருந்து கால் கட்டைவிரல் வரை மறத்துப்போன உணர்வில் அலறிக்கொண்டு எழுந்து வெளியே ஓடி ....கீழே விழுந்து....

உதவிகள்...என்ன சார் ஆச்சு...என்ன சார் ஆச்சு!என ஆளாளுக்கு உசுப்ப

நான் கெக்கபிக்கன்னு...நாக்கு குழறி ....

........தொடரும்..,