Showing posts with label ஜோதிடமும் சுபவீ அண்ணணும். Show all posts
Showing posts with label ஜோதிடமும் சுபவீ அண்ணணும். Show all posts

Monday, 5 January 2009

ஆனால்...நிகழ்ச்சியின் இறுதியில் சுபவீ அண்ணன் சொன்னதுதான் எனக்கும் உடன்பாடு.(இதுதான் தலைப்பு)

எனினும்,

கடந்த 4.01.2008 அன்று விஜய் டி.வியில் ' நீயா? நானா ? 'வில் சோதிடம் சம்மந்தமாக நிகழ்ந்த விவாதத்தின் அடிப்படையில் நானும் சில கருத்துகளை முன் வைத்தே தீர வேண்டும். இயற்கை உபாதையைப்போல் தவிர்க்க முடியாதது இது.

பொதுவாகவே டி.விக்களில் விவாத நிகழ்ச்சிகளின்போது சேனலை மாற்றிவிடுவேன் நான். யாராவது தவறாக வாதம் செய்து கொண்டிருக்கும்போது.. வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு கையாலாகத்தனத்தின் உக்கிரத்தில் நரம்புகள் முறுக்கேறி...ரத்தம் தலைக்கேறி...ஆனால் குறுக்கிட முடியாத அவஸ்தை...அது ரொம்ப கொடுமை. அதைவிட சேனல் மாறிப்போய் குத்தாட்டம்போடும் எவளது தொப்புளிலாவது விழுந்து கிடப்பது மேல்.

அது என்னவோ இந்த மாதிரி ஒரு விஷயத்தை நிறுவும் முனையில் அமர்பவர்களில் அரைவேக்காடுகளே அதிகம்.

பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் மறுப்பது சுலபம் .எள்ளி நகையாடி நையாண்டி செய்து மறுத்துப்பேசுவதற்கு பெரிய அளவில் விஷய ஞானமே தேவையில்லை.ஆனால் ஒன்றை நிறுவ முனையும் போது 'நுனிப்புல்'ஞானமெல்லாம் போதாது. காரணகாரியம்-சாட்சிகளுடன் பிரம்ம்பிரயத்தனம் தேவைப்படும். அன்று அவ்வளவு தயாராக யாரும் வராதது சங்கடமாக இருந்தது.

சோதிடத்தில் ஆர்வமுள்ள நான் பொதுமக்கள் அதை நுகர்வது குறித்து எதிர்மறை கருத்து உடையவன்தான். சோதிடத்தில் அன்று எழுந்த ...எழாத ....வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு இடங்களில் எழும் சில சந்தேக கேள்விகளுக்கு கொஞ்சம் விளக்கங்கள் என்னிடம் உண்டு.

1.ஒரு மருத்துவர் கேள்வி எழுப்பினார்

ஒரு குழந்தை முழுமையாய் பிறந்து வருவதற்கு சில நிமிட கணக்கில் நேரமாகும். அதிகபட்சம் 20 நிமிட பிரசவ நேரத்தில் எந்த நேரத்தை பிரசவ நேரமாக குறிப்பது? தலை வெளியே வந்ததையா? பாதிஉடல் வெளியே வந்த்தையா? இல்லை முழுதும் வெளியே வந்தபிறகா? தொப்புள்கொடி அறுத்தபிறகா? இல்லை..எல்லாம் முடிந்து ஆசுவாசமாகி கைகால்களை கழுவிக்கொண்டு ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வந்து குழந்தை பிறந்த நேரம் என்று உத்தேசமாக ஒரு நேரத்தை பதிவு செய்கிறோமே....அதையா?

அதெல்லாம்..ஒரு குழப்பமுமில்லை. ஒரு குழந்தைக்கு தாயின்வயிற்றுக்குள் சுவாசமில்லை. மேற்சொன்ன எந்த நிலைகளிலுமில்லை. தாயின் தொடர்பாய் ஒட்டிக்கிடக்கும் தொப்புள்கொடி அறுபட்டவுடன் சுவாசக்காற்றுக்காய் தவித்து இயற்கையிலேயே முதன்முதலாய் தனது மூக்கின் வழியே இந்த பிரபஞ்சக்காற்றை உள்ளே இழுக்கிறது குழந்தை. அந்த முதல் சுவாசத்தின்போதுதான் பிரபஞ்சவெளியில் இருக்கும் கிரகங்களின் கதிர்கள் அவைகளின் நிலை-தன்மையோடு...அதன் உடலுக்குச்சென்று பதிவாகிறது .இறந்தே பிறக்கும் குழந்தைக்கு என்ன ஜாதகம் என்ற கேள்விக்கும் இதிலேயே பதில் இருக்கிறது.

முதல் சுவாசக்காற்று உள்ளே நுழையும்போது நுரையீரல்-சுவாசப்பாதைகள் பரபரவென்று பிரிந்து வழிவிடும்போது ஏற்படும் ஒருவித எரிச்சலில் அல்லது வலியில்தான் குழந்தை வீறிட்டு அழுகிறது. எனவே குழந்தையின் முதல் அழுகுரல்தான் விதிநேரம். ஆக மனிதன் அவனதுவிதிபதிவாகும்போதே அழுகையுடன்தான் அதை பதிவுசெய்து கொள்கிறான்.

2. இரண்டாமாவது விஷயத்திற்கு போகும்முன் முதல் விஷயம் சார்ந்து ஒன்று சொல்லிவிடுகிறேன். அன்று நீயா நானாவில் சோதிடத்தை மறுக்கும் திசையில் அமர்ந்திருந்த ஒரு டாக்டர்.. அவருக்கு-அவரை சார்ந்தவர்களுக்கு சோதிடம் பொய்த்துப்போன கதைகளை சொல்லிக்கொண்டுவந்தார்.

அவரே ஒரு இடத்தில் ஒரு கேள்வியையும் எழுப்பினார். நாங்கள் பிரசவம் பார்த்தபிறகு ஆசுவாசமாக (டீயெல்லாம் சாப்பிட்டுவந்து..) பிரசவ டென்சன்எல்லாம் குறைந்த பிறகுதான் ஒரு குழந்தையின் பிறப்பு நேரத்தையே எழுதுவோம். அந்த குத்துமதிப்பு நேரத்தைவைத்துக்கொண்டுதான் இவர்கள் சோதிடப்பலனையெல்லாம் சொல்கிறார்கள்.

அடப்பாவி! அப்போ சோதிடம் பொய்த்துபோவதற்கு நாங்களல்ல நீங்கள்தான் முதல் காரணம். சோதிடத்தின் முதல் கயமையே உங்ககிட்ட இருந்துதான் ஆரம்பிக்குதான்னு அவரை மடக்கி எதிர்கேள்வி கேட்க ஆளில்லாமல் போய்விட்டது. அப்புறம் எப்படிய்யா நாங்க சொல்ற பலன் சரியாவரும். அதையே காரணம் காட்டி எப்படிய்யா சோதிடம் பொய்னு வாதாட வேற வந்தேன்னு கேக்க...எதிரணியில யாருமில்லை.

அதுமட்டுமில்லாம சோதிடம் உண்மைன்னு நிறுவ வந்த கூட்டத்துல ஏகப்பட்ட கூத்து நடந்தது. சரி சில சோதிடர்கள் செய்யும் தவறு, பலனும் மாறிப்போகிறதுன்னு நீங்களே ஒத்துக்கறீங்களே எதை எதை தவிர்க்கனும்னு நீங்களே சொல்லுங்கன்னு மைக்கை அவருகிட்டே கொடுத்தபோது, கிளி ஜோசியம் தப்புங்க-சரி மைக்கை அவருகிட்டே கொடுங்க குறி சொல்றது சரியா வராதுங்க-சரி மைக்கை...கைரேகை கோளாறுங்க என்கிற ரீதியில் ஆளாளுக்கு மறுத்து அவர்கள் தலையில் அவர்களே மண்ணைப்போட்டுக்கொள்ள ஒரு கட்டத்தில் சுபவீ அழகாக சொன்னார்.

ஆக...மொத்தம் அவங்க அத்தன பேரும் அத்தன ஜோதிட முறையையும் அவங்களே மறுத்துட்டாங்க...என்ன..! அவங்க பகுதிபகுதியா மறுத்தத நாங்க மொத்தமா மறுக்கிறோம் அவ்வளவுதான்! என்றார்..

எதிர்புறம் ஒரு டாக்டர் உக்காந்துதான் ஒரேடியான எதிர்வாதம் பண்ணிகிட்டிருந்தார். இந்த நிகழ்வு ஒரு மருத்துவத்தை குறித்ததாக இருந்து கேலரியில் சித்தா, யுனானி, அக்குபங்சர், ஆயுர்வேதம், ஹோமியோபதி, அலோபதின்னு டாக்டர்கள் அமர்ந்திருந்து மைக்கை கைமாத்திக்கொண்டே போயிருந்தால் ஆயுர்வேதம் அலோபதியை மறுக்க, அலோபதி சித்தாவை மறுக்க, சித்தா அக்குபங்சரை மறுக்கன்னு...இதே விஷயம்தான் நடந்திருக்கும்.

அதுக்காக பகுதிபகுதியா எல்லாமருத்துவமும் மறுக்கப்பட்டதால நாம மொத்தமா வைத்தியத்தையே மறுத்துவிடமுடியுமான்னு கொஞ்சம் சாமர்த்தியமா .....(வேற வழி?) ஒப்பேத்தியிருக்கலாம். அதையும் யாரும் செய்யல.

இதுக்கிடையில் சூரியன் ஒரு கோளே இல்ல...சந்திரன் ஒரு துணைக்கோள்தான். ராகு கேதுன்னா என்ன? இப்படி சில கேள்விகளுக்கு யாரும் சரியான பதிலே சொல்லலை.

ராகு கேதுங்கறது கிரகங்களே இல்ல..அது ஒரு வெற்றிடம்..பூஜ்யம் .(நிழல் கிரகம்) ஆனா ஒண்ணுமே இல்லன்ற ஒண்ணு எப்படி effect பண்ணும். அப்படின்னா ஆதியிலே ராகு கேதுகளே இல்லாமதான இந்த சோதிடம் இருந்தது....இடையில் வந்த அதுதானே இப்ப ரொம்ப பிரச்னையா இருக்கு...ராகுகாலம் அது இதுன்னு...!- இப்படி சில கேள்விகள்.

ஒண்ணுமே இல்லாத ராகு கேது...எண் வரிசையில் ஒண்ணுமே இல்லாத0பூஜ்யம் மாதிரி. யாரையாவது எண்களை எழுதச்சொன்னா 0த்திலிருந்து ஆரம்பிக்கிறது இல்ல..1,2,3...ன்னுதான் ஆரம்பிக்கிறோம். எண்வரிசையில் அத யோசிக்கிறதே இல்ல. அது ஒரு எண்ணுமில்லை. ஆனா அந்த 0வோட effectஎண்வரிசையில் எவ்வளவு பெரிய விஷயமோ அப்படித்தான் ராகு கேதுவும். அதுமட்டுமில்ல பூஜ்யம் கூட இடையில் கண்டுபிடிக்கப்பட்டதுதான். பிரச்சனை அதுவல்ல.

வானமண்டலத்தில் இருக்கிற சூரியன் நிலவு போன்றவற்றால் பூமியில் சில விளைவுகள் ஏற்படுகிறதா இல்லையா? பௌர்ணமி பொழுதில் அலையின் சீற்றமும், அமாவாசை,பௌர்ணமிபொழுதுகளில் மனநிலை குன்றியவர்களிடம் அதிகபட்ச பாதிப்பும் நாம் கண்கூடாக பார்ப்பதுதானே. அதைத்தான் சோதிடத்தில் மதிகாரகன் என்று நிலவை சொல்கிறார்கள். ஏன் நிலவுக்கு மதி என்று பெயரே உண்டு. அதுபோல எல்லா கிரகங்களின் தாக்கமும் பூமியில் உள்ள எல்லா பொருள்களிடத்திலும் உயிர்களிடத்திலும் சில பாதிப்புகளை உண்டு பண்ணவே செய்கிறது.

அறிவியல் இதுவரை நிரூபிக்காத விஷயங்கள் அணைத்துமே நம்ப தகுந்ததில்லை என்று கங்கணம் கட்டிக்கொள்ளமுடியாது. இயற்கையின் அதிசயங்களில் 1% கூட அறிவியல் இதுவரை எட்டியிருக்காது. அப்படிபார்த்தால் சென்ற நூற்றாண்டில் ஒலி அலைகள் பொய்,ஒளி அலைகள் பொய், இன்னும் கொஞ்சம் தள்ளிப்போனால் மின்சாரம் பொய், நிறுவப்படாத வரை எல்லாம் பொய்தான். அறிவியல் தொடாத...தொட விரும்பாத.. இயலாத விஷயங்களை புறக்கணித்துவிடமுடியாது...

இப்படி சோதிடம் சார்ந்த விஷயங்கள் நிறைய எழுதிட்டே போகலாம். அதை மறுப்பவர்கள் அனைவரும், அதைத்தான் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். சோதிடம் சொன்ன 7 கிரகங்கள்தான் அதனதன் பெயரிலேயே ஞாயிறு...திங்கள்,செவ்வாய்ன்னு கிழமைகளாய் புழக்கத்தில் இருக்கிறது. அதன் தொகுப்புதான் அதாவது சூரியன் வான்வெளியில் (சோதிடத்தில் 12 கட்டங்கள்) 12 பகுதியாக நகர்வதைத்தான் 12மாதங்களாக அதன் தொகுப்பு வருடங்களாக...யுகங்களாக...so விருப்போ மறுப்போ...அந்த சூழலில்தான் அனைவரும் இருக்கிறோம்.

சரி..இதையெல்லாம் சொன்னாலும்.. எனக்கு, சோதிடம் பார்த்து யாரும் வாழ்க்கை நடத்துவதில் உடன்பாடில்லை.

ஒரு முழுமைபெறாத...யாரும் முற்றிலும் அறிய முடியாத கலையை நம்பி வாழ்க்கையை நடத்தமுடியாது. அதிலும் சோதிடர் என்ற பெயரில் ஏகப்பட்ட புல்லுருவிகள் வேறு.

சோதிடத்தை பார்த்து எதையும் மாற்றிக்கொள்ளவோ திருத்திக்கொள்ளவோ தப்பித்துக்கொள்ளவோ முடியவே முடியாது. பரிகாரமென்பதெல்லாம் சுத்த பேத்தல்.

அதுவும் மாறிவரும் உலகில் கிரகங்களின் கதிர் வீச்சுகளே இங்கிருக்கும் செயற்கை மின்காந்த அலைகளால் ஏகப்பட்ட பாதிப்படைந்து வீரியம் மாறித்தான் போயிருக்கும். நூறு இருநூறு வருடங்களுக்கு முன் சொன்ன பலன் இப்போது ஏகப்பட்ட மாற்றத்துக்குள்ளாகியிருக்கும். ஆனால் நாம் இன்னும் பழம்பஞ்சாங்கமாகத்தான் பலன் சொல்லிக்கொண்டிருப்போம்.

முன்பு கிராமத்தில் ஓட்டு வீட்டிற்குள் பிறந்து விழுந்து முதல் மூச்சை உள்வாங்கிய குழந்தைக்கும் நகரத்தில் ஏகப்பட்ட மின்சார பயன்பாடு...கதிர்வீச்சுகளும் நிறைந்திருக்கும் மருத்துவமனையில் பிறந்து மூச்சை உள்ளிழுக்கும் குழந்தைக்கும் வித்தியாசத்தை யோசித்துப்பாருங்கள்.

கடவுள் பெயரில் தோன்றிய மத்ததின்பெயரால் பல இழிவுகள் தோன்றி... நாசமா போனப்போ எந்த நிபந்தனையுமில்லாம கடவுளையே அடியோடு மறுத்து நாமெல்லாம் உய்ய வழிசொன்ன பெரியார் மாதிரி

இதுல இத மட்டும் எடுத்துக்குவோம் அதுல அத மட்டும் எடுத்துக்குவோம்னு..குழப்பாம எந்த நிபந்தனையுமில்லாம ஒட்டு மொத்தமா சோதிடத்த மறுத்துட்டு வேலையப்பாருங்க...

நான் மேல்சொன்ன விஷயங்கள் ஒரு முழு இலையை பந்திக்கு விரித்து அதில் ஒரு ஓரமாய் உண்ண ஒரு கை சோறு வைத்தமாதிரி சமாளிப்புதான். இலை முழுக்க நரகலை பரிமாறி அதை உண்ணச்சொல்ல..நீங்களும் இங்கே நான் பரிமாறியிருக்கும் ஒரு கைப்பிடிச்சோறுக்காக நரகல் நிறைந்திருக்கும் இந்த இலையில் உட்கார்ந்து சாப்பிட துணிந்துவிடாதீர்கள்...போய் வேலையை பாருங்க...!