ஆனால்...நிகழ்ச்சியின் இறுதியில் சுபவீ அண்ணன் சொன்னதுதான் எனக்கும் உடன்பாடு.(இதுதான் தலைப்பு)
எனினும்,
கடந்த 4.01.2008 அன்று விஜய் டி.வியில் ' நீயா? நானா ? 'வில் சோதிடம் சம்மந்தமாக நிகழ்ந்த விவாதத்தின் அடிப்படையில் நானும் சில கருத்துகளை முன் வைத்தே தீர வேண்டும். இயற்கை உபாதையைப்போல் தவிர்க்க முடியாதது இது.
பொதுவாகவே டி.விக்களில் விவாத நிகழ்ச்சிகளின்போது சேனலை மாற்றிவிடுவேன் நான். யாராவது தவறாக வாதம் செய்து கொண்டிருக்கும்போது.. வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு கையாலாகத்தனத்தின் உக்கிரத்தில் நரம்புகள் முறுக்கேறி...ரத்தம் தலைக்கேறி...ஆனால் குறுக்கிட முடியாத அவஸ்தை...அது ரொம்ப கொடுமை. அதைவிட சேனல் மாறிப்போய் குத்தாட்டம்போடும் எவளது தொப்புளிலாவது விழுந்து கிடப்பது மேல்.
அது என்னவோ இந்த மாதிரி ஒரு விஷயத்தை நிறுவும் முனையில் அமர்பவர்களில் அரைவேக்காடுகளே அதிகம்.
பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் மறுப்பது சுலபம் .எள்ளி நகையாடி நையாண்டி செய்து மறுத்துப்பேசுவதற்கு பெரிய அளவில் விஷய ஞானமே தேவையில்லை.ஆனால் ஒன்றை நிறுவ முனையும் போது 'நுனிப்புல்'ஞானமெல்லாம் போதாது. காரணகாரியம்-சாட்சிகளுடன் பிரம்ம்பிரயத்தனம் தேவைப்படும். அன்று அவ்வளவு தயாராக யாரும் வராதது சங்கடமாக இருந்தது.
1.ஒரு மருத்துவர் கேள்வி எழுப்பினார்
முதல் சுவாசக்காற்று உள்ளே நுழையும்போது நுரையீரல்-சுவாசப்பாதைகள் பரபரவென்று பிரிந்து வழிவிடும்போது ஏற்படும் ஒருவித எரிச்சலில் அல்லது வலியில்தான் குழந்தை வீறிட்டு அழுகிறது. எனவே குழந்தையின் முதல் அழுகுரல்தான் ‘விதி’நேரம். ஆக மனிதன் அவனது‘விதி’பதிவாகும்போதே அழுகையுடன்தான் அதை பதிவுசெய்து கொள்கிறான்.
அவரே ஒரு இடத்தில் ஒரு கேள்வியையும் எழுப்பினார். நாங்கள் பிரசவம் பார்த்தபிறகு ஆசுவாசமாக (‘டீ’யெல்லாம் சாப்பிட்டுவந்து..) பிரசவ டென்சன்–எல்லாம் குறைந்த பிறகுதான் ஒரு குழந்தையின் பிறப்பு நேரத்தையே எழுதுவோம். அந்த குத்துமதிப்பு நேரத்தைவைத்துக்கொண்டுதான் இவர்கள் சோதிடப்பலனையெல்லாம் சொல்கிறார்கள்.
அடப்பாவி! அப்போ சோதிடம் பொய்த்துபோவதற்கு நாங்களல்ல நீங்கள்தான் முதல் காரணம். சோதிடத்தின் முதல் கயமையே உங்ககிட்ட இருந்துதான் ஆரம்பிக்குதான்னு அவரை மடக்கி எதிர்கேள்வி கேட்க ஆளில்லாமல் போய்விட்டது. அப்புறம் எப்படிய்யா நாங்க சொல்ற பலன் சரியாவரும். அதையே காரணம் காட்டி எப்படிய்யா சோதிடம் பொய்னு வாதாட வேற வந்தேன்னு கேக்க...எதிரணியில யாருமில்லை.
ஆக...மொத்தம் அவங்க அத்தன பேரும் அத்தன ஜோதிட முறையையும் அவங்களே மறுத்துட்டாங்க...என்ன..! அவங்க பகுதிபகுதியா மறுத்தத நாங்க மொத்தமா மறுக்கிறோம் அவ்வளவுதான்! என்றார்..
அதுக்காக பகுதிபகுதியா எல்லாமருத்துவமும் மறுக்கப்பட்டதால நாம மொத்தமா வைத்தியத்தையே மறுத்துவிடமுடியுமான்னு கொஞ்சம் சாமர்த்தியமா .....(வேற வழி?) ஒப்பேத்தியிருக்கலாம். அதையும் யாரும் செய்யல.
இதுக்கிடையில் சூரியன் ஒரு கோளே இல்ல...சந்திரன் ஒரு துணைக்கோள்தான். ராகு கேதுன்னா என்ன? இப்படி சில கேள்விகளுக்கு யாரும் சரியான பதிலே சொல்லலை.
வானமண்டலத்தில் இருக்கிற சூரியன் நிலவு போன்றவற்றால் பூமியில் சில விளைவுகள் ஏற்படுகிறதா இல்லையா? பௌர்ணமி பொழுதில் அலையின் சீற்றமும், அமாவாசை,பௌர்ணமிபொழுதுகளில் மனநிலை குன்றியவர்களிடம் அதிகபட்ச பாதிப்பும் நாம் கண்கூடாக பார்ப்பதுதானே. அதைத்தான் சோதிடத்தில் மதிகாரகன் என்று நிலவை சொல்கிறார்கள். ஏன் நிலவுக்கு ‘மதி’ என்று பெயரே உண்டு. அதுபோல எல்லா கிரகங்களின் தாக்கமும் பூமியில் உள்ள எல்லா பொருள்களிடத்திலும் உயிர்களிடத்திலும் சில பாதிப்புகளை உண்டு பண்ணவே செய்கிறது.
அறிவியல் இதுவரை நிரூபிக்காத விஷயங்கள் அணைத்துமே நம்ப தகுந்ததில்லை என்று கங்கணம் கட்டிக்கொள்ளமுடியாது. இயற்கையின் அதிசயங்களில் 1% கூட அறிவியல் இதுவரை எட்டியிருக்காது. அப்படிபார்த்தால் சென்ற நூற்றாண்டில் ஒலி அலைகள் பொய்,ஒளி அலைகள் பொய், இன்னும் கொஞ்சம் தள்ளிப்போனால் மின்சாரம் பொய், நிறுவப்படாத வரை எல்லாம் பொய்தான். அறிவியல் தொடாத...தொட விரும்பாத.. இயலாத விஷயங்களை புறக்கணித்துவிடமுடியாது...
இப்படி சோதிடம் சார்ந்த விஷயங்கள் நிறைய எழுதிட்டே போகலாம். அதை மறுப்பவர்கள் அனைவரும், அதைத்தான் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். சோதிடம் சொன்ன 7 கிரகங்கள்தான் அதனதன் பெயரிலேயே ஞாயிறு...திங்கள்,செவ்வாய்ன்னு கிழமைகளாய் புழக்கத்தில் இருக்கிறது. அதன் தொகுப்புதான் அதாவது சூரியன் வான்வெளியில் (சோதிடத்தில் 12 கட்டங்கள்) 12 பகுதியாக நகர்வதைத்தான் 12மாதங்களாக அதன் தொகுப்பு வருடங்களாக...யுகங்களாக...so விருப்போ மறுப்போ...அந்த சூழலில்தான் அனைவரும் இருக்கிறோம்.
சரி..இதையெல்லாம் சொன்னாலும்.. எனக்கு, சோதிடம் பார்த்து யாரும் வாழ்க்கை நடத்துவதில் உடன்பாடில்லை.
ஒரு முழுமைபெறாத...யாரும் முற்றிலும் அறிய முடியாத கலையை நம்பி வாழ்க்கையை நடத்தமுடியாது. அதிலும் சோதிடர் என்ற பெயரில் ஏகப்பட்ட புல்லுருவிகள் வேறு.
சோதிடத்தை பார்த்து எதையும் மாற்றிக்கொள்ளவோ திருத்திக்கொள்ளவோ தப்பித்துக்கொள்ளவோ முடியவே முடியாது. பரிகாரமென்பதெல்லாம் சுத்த பேத்தல்.
அதுவும் மாறிவரும் உலகில் கிரகங்களின் கதிர் வீச்சுகளே இங்கிருக்கும் செயற்கை மின்காந்த அலைகளால் ஏகப்பட்ட பாதிப்படைந்து வீரியம் மாறித்தான் போயிருக்கும். நூறு இருநூறு வருடங்களுக்கு முன் சொன்ன பலன் இப்போது ஏகப்பட்ட மாற்றத்துக்குள்ளாகியிருக்கும். ஆனால் நாம் இன்னும் பழம்பஞ்சாங்கமாகத்தான் பலன் சொல்லிக்கொண்டிருப்போம்.
முன்பு கிராமத்தில் ஓட்டு வீட்டிற்குள் பிறந்து விழுந்து முதல் மூச்சை உள்வாங்கிய குழந்தைக்கும் நகரத்தில் ஏகப்பட்ட மின்சார பயன்பாடு...கதிர்வீச்சுகளும் நிறைந்திருக்கும் மருத்துவமனையில் பிறந்து மூச்சை உள்ளிழுக்கும் குழந்தைக்கும் வித்தியாசத்தை யோசித்துப்பாருங்கள்.
கடவுள் பெயரில் தோன்றிய மத்ததின்பெயரால் பல இழிவுகள் தோன்றி... நாசமா போனப்போ எந்த நிபந்தனையுமில்லாம கடவுளையே அடியோடு மறுத்து நாமெல்லாம் உய்ய வழிசொன்ன பெரியார் மாதிரி
இதுல இத மட்டும் எடுத்துக்குவோம் அதுல அத மட்டும் எடுத்துக்குவோம்னு..குழப்பாம எந்த நிபந்தனையுமில்லாம ஒட்டு மொத்தமா சோதிடத்த மறுத்துட்டு வேலையப்பாருங்க...
நான் மேல்சொன்ன விஷயங்கள் ஒரு முழு இலையை பந்திக்கு விரித்து அதில் ஒரு ஓரமாய் உண்ண ஒரு கை சோறு வைத்தமாதிரி சமாளிப்புதான். இலை முழுக்க நரகலை பரிமாறி அதை உண்ணச்சொல்ல..நீங்களும் இங்கே நான் பரிமாறியிருக்கும் ஒரு கைப்பிடிச்சோறுக்காக நரகல் நிறைந்திருக்கும் இந்த இலையில் உட்கார்ந்து சாப்பிட துணிந்துவிடாதீர்கள்...போய் வேலையை பாருங்க...!