Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, 17 January 2009

மழை

தட்....தட்.....தட்......,
நேற்றிரவு முழுதும்
என் வீட்டு தகரக் கூரையின் மீது
தட்டச்சு......
விடிந்த பிறகு
எழுந்து போய் படித்துப் பார்த்தேன்
ஈரம் என்ற ஒரே வார்த்தை.
காதல்

'எங்கே?' என்றேன்
'எங்கும்!' என்றான் என் பிரகலாத நண்பன்.
'எங்குமென்றால்...? எங்கு...?'
'தூண் உன்னிலும்....துரும்பு என்னிலும்'
'இந்த தூணிலுண்டா...?' என் மார்தட்டி சிரித்தேன்.
'உண்டு!' என்றான்.

ஒரு நாள் ஒரு பார்வை கடாயுதம் தாக்கி
தூண் பிளந்தது.
சிலிர்த்து சிலுப்பி எழுந்தது நரசிம்மம்.
பகலோ இரவோ! ஒளியோ இருளோ....
-ஒரு சூன்ய வேளையில்!
உள்ளோ புறமோ ஓர் நிலையற்ற நிலைப்படியில்.
பூமியிலோ ஆகாயத்திலோயன்றி
-ஒரு மிதப்பில்
அன்பின் ஆயுதத்தால் கிழிந்து கிடந்தேன்.
இனிமையாய் இறந்து கிடந்தேன்.
நன்றி நண்பனே பிரகலாதா!
-இரணியன்.

Monday, 12 January 2009

நிர்வாணக் கேள்விகள்

என் கேள்விகளின் நிர்வாணத்தை
ரசிக்கின்றன
உடை சுமந்த உன் பதில்கள்

எனினும்...
களைந்த பின்னும் உடல்வாடை சுமக்கும்
உடைகளைப்போல்...

தயங்கி தயங்கி...
களைந்த பின்னும் உடைவாடை
சுமக்கும் உன் பதில்கள்

இன்னும்
உன் பதில்களின்
நிஜமான நிர்வாணத்திற்காய்
காத்திருக்கிறது...
நிஜமான நிர்வாணத்துடன்
என் கேள்விகள்.

உன் ஞாபகம்

மழையின் வரவில்
சன்னல் வழி சாரலில்
புலர்ந்த பொழுதின் புது பூவில்
தாவர இளந்தளிரில்
புல் நுனி பனித்துளியில்
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில்
மயங்கும் மஞ்சள் வெயிலில்
குயிலின் கூவலில்
குளிர்ந்த நெருப்பில்
சுட்ட பனியில்
தூர-குழலின் இழையில்
விளக்குச்சுடரின் நடன நளினத்தில்
-என்று எதிலும் எப்போதும்
உன் ஞாபகம்...உன் ஞாபகம்...உன் ஞாபகம்
என்றெல்லாம் பொய் ஏன் சொல்ல வேண்டும்?

உண்மையில்
உன் ஞாபகத்திற்கிடையே
இடறுவதில்லை இவை எதுவும்
எனக்கும் என் கவிதைக்கும்.

சாகசம்

எப்போதுமே
அர்த்தங்களுக்கு அகப்படாமல்
சாகசம் செய்கிறது உன் வார்த்தைகள்
ஆனால்...அர்த்தங்களை சீண்டியபடி.

சரி சொல்!
இந்த கண்ணாமூச்சியாட்டத்தில்
உன்னை தீண்ட வேண்டுமா?
அல்லது தீண்ட முடியாமல் தவிப்பவனாய்
நடிக்க வேண்டுமா நான்..?

Monday, 5 January 2009

டி.சிவகுமார் கவிதைகள்

வாய்மை

குறி விறைத்து
புணர்ச்சிக்காய் அலையும்
பொய்மை.
புணர்ச்சியின் விளைவாய்
பிறந்து விழும்...தொடர்ச்சியாய்
மேலும் மேலும் பொய்கள்.
வம்சம் வளர்க்கும்
பொய்மைக்கெதிராய்
மலட்டுத்தனத்துடன்
மௌனமாய் வாய்மை.
சரிதான்
வாரிசொன்றெதற்கு
சாஸ்வத வாய்மைக்கு.

காமம்

பிறந்துவிழும் முனைப்பில்
யோனி தேடும்
கர்ப்பத்துள் முற்றிய காமம்
பிரசவ வேதனையின்
உக்கிரம் தாங்காமல்
உருக்குலையும் உடல்.
பிறந்து விழுந்த பிறகும்
அறுபடாமல்...
தொடர்பாய் தொங்கி கிடக்கும்
தொப்புள் கொடி
வழக்கம் போல்
நிறைத்துக்கொள்ளும்
கர்பப்பை தன்னுள்
அடுத்த கருவை.

நிர்வாண சங்கு

சாத்தியப்பட்ட இலக்குகளில்
சுவாரசியமற்று
அசாத்திய இலக்குகளில்
ஆர்வமற்று
வாழ்ந்து கழிகிறது வாழ்க்கை.
நிஜத்தை புறக்கணித்து
வெறும் நம்பிக்கையை மட்டும்
எப்படி நம்பும் மனம்.
நிர்வாணம் சுகமாய் பட
ஆடைகளை பற்றிய அக்கறை
அற்று விட்டது.
சும்மா கிடக்கிறேன்
யாராவது
ஊதிக் கெடுக்காமலிருந்தால் சரி.

ஹைக்கூ..?

அடுப்பிலிட்டு எப்படி எரிப்பேன்
தட்டிய வரட்டியில்
இறந்துபோன அம்மாவின் விரல்கள்.
...........................................................
மொட்டை மாடியென
எப்படி சொல்வது..?
நீ தான் தினம் பூக்கிறாயே..!
...........................................................
சாக்கடை தேங்கி
நாற்றம்
துவாரம் அடைத்துக்கொண்டு
ஒரு பூ..!
............................................................
பாலருந்தும் குழந்தை
எதிரே சதை திண்ணும் கண்கள்
பசிகள்.
....................................................
பிரதிபலிக்க ஏதுமில்லாத
கணம் தேடி
கண்ணாடி.
......................................................